போலி பட்டா இடத்தை அளக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம்
23 Jul 2026, 10:29 pm
<p><strong>போலி பட்டா இடத்தை அளக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம்</strong></p><p>பொன்னமராவதி, ஜூலை 23- அரசுக்குச் சொந்தமான பழைய பேருந்து நிலையம், அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்தும் திடல், வாடகை கார் வேன் நிறுத்துமிடம் ஆகிய இடங்களுக்கு போலி பட்டா பெற்று பத்திர பதிவு செய்த நபர்கள் மீதும், உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற இருந்தது. சிஐடியு ஒருகிணைப்பாளர் குமார் தலைமையில் நடைபெற இருந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவைக் காட்டி, இடத்தை அளந்து அத்து காண்பிக்க பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டு, வட்டாட்சியர் தலைமையில் வந்த வருவாய் துறை அதிகாரிகளை, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரை.நாராயணன், ஒன்றியச் செயலாளர் பக்ருதீன் தலைமையில் கார், வேன் ஓட்டுநர்கள் உரிமையாளர்கள், சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கட்சியினர், சாலையோர வியாபாரிகள் முற்றுகையிட்டனர். பொது இடத்தை பாதுகாக்க, இடத்தை அளக்க கூடாது. நாங்கள் நீதிமன்றம் செல்ல ஏதுவாக கால அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இடத்தை பார்வையிட்ட வட்டாட்சியர் பழனிச்சாமி தலைமையிலான அதிகாரிகள், இடம் முட்புதராக உள்ளதாகவும், சுத்தம் செய்ததால் தான் அளக்க முடியும் எனவும் கூறி அளக்காமல் சென்று விட்டனர். மேல் நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க வாடகை கார் வேன் ஓட்டுநர் உரிமையாளர்கள் சங்க கூட்டம் மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிஐடியு சார்பில் அரசு சொத்து மீட்புக் குழு அமைத்து ஆர்டிஓ ரத்து செய்த பட்டாக்களை, டிஆர்ஓ கொடுத்ததை நீக்க நீதிமன்றம் செல்வது. பொன்னமராவதியில் அனைத்துக் கட்சிகளையும் இணைத்து, பொது இடத்தை மீட்க கண்டன பொதுக்கூட்டம், இயக்கங்கள் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p>
