பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதான வழக்கறிஞர் உயிரிழப்பு!
yesterday
<p>பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முக்கிய நபரான வழக்கறிஞர் அன்வர்தீன் (65) மாரடைப்பால் உயிரிழந்தார்.</p><p>திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தண்டபாணி சாமிகள் மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலத்தை ரூ.2 கோடிக்கு மோசடியாக பதிவு செய்தது தொடர்பாக, சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், இடத்தை வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி, வழக்கறிஞர் அன்வர்தீன், இடைத்தரகராகச் செயல்பட்ட ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட 11 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.</p><p>இந்நிலையில், நேற்று இரவு 10.30 மணியளவில் அன்வர்தீனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிறை அதிகாரிகள் அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.</p><p>அன்வர்தீன் உயிரிழப்புக்கு வேறு காரணம் இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் மதுரை கரிமேடு போலீசார், அவரது மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.</p>
