உதகையில் ரோஜா கண்காட்சி துவங்கியது!
14 May 2026, 9:35 pm
<p><strong>உதகையில் ரோஜா கண்காட்சி துவங்கியது!</strong></p><p>உதகை, மே 14 - நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கி யுள்ள நிலையில், உதகை ரோஜா பூங்காவில் வியாழனன்று ரோஜா கண்காட்சி துவங்கியது. </p><p>40 ஆயிரம் செடிகளில் ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்குவதை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.</p><p> மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் - உதகையில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலாத் தலங்களை ரசிக்கவும், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். </p><p>இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில், மாவட்டம் நிர்வாகம் சார்பில் கோடை விழா நடத்தப்படுகிறது. </p><p>தேர்தல் சமயம் என்பதால், இந்த ஆண்டு கோடை விழா நடத்தப்பட வில்லை. </p><p>மேலும், காய்கறி கண்காட்சி உட்பட பல்வேறு கண்காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. </p><p>ஆனால், மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழ கண்காட்சி மட்டும் இந்த ஆண்டு நடத்தப் பட உள்ளது. </p><p>தாவரவியல் பூங்கா மலர் கண்காட்சி க்கு நிகராக ரோஜா பூங்காவில் ரோஜா பூக்களை கொண்டு கண்காட்சி நடைபெறும்.</p><p> இந்த ஆண்டு ரோஜா கண்காட்சி வியாழ னன்று துவங்கியது. மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு கலந்து கொண்டு, கண்காட்சி யைத் துவக்கி வைத்தார். </p><p>இந்த கண்காட்சி மே 18 வரை 5 நாட்கள் நடக்கிறது. </p><p>சுற்றுலாப் பயணி களை கவர்வதற்காக அன்னம், கழுகு உள்ளிட்ட பறவை வடிவங்களில் மலர்கள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. </p><p>இதுகுறித்து தோட்டக் கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ரோஜா பூங்காவில் 4 ஆயிரம் வகைகளில் 40 ஆயிரம் ரோஜா செடிகள் உள்ளன. </p><p>தற்போது சுற்றுலாப் பயணிகளுக்காக பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. </p><p>மேலும், கிணற்றை சுற்றி ஹெரிடேஜ் கார்டன், 2 இடங்களில் செயற்கை நீர்வீழ்ச்சிகள் உள்ளதோடு, அலங்கார செடிகள் அழகாக காட்சி தரும் வகையில் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது என்றனர்.</p>
