மே 18 முதல் மலர் கண்காட்சி களைகட்டும் உதகை
15 May 2026, 11:10 pm
<p><strong>மே 18 முதல் மலர் கண்காட்சி களைகட்டும் உதகை</strong></p><p>உதகமண்டலம், மே 15 - சர்வதேச அளவில் புகழ்பெற்ற நீலகிரி கோடை விழாவின் சிகர நிகழ்ச்சியான 128-ஆவது மலர் கண்காட்சி, வரும் மே 18-ஆம் தேதி தொடங்கி 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. </p><p>வழக்கமாக மே மாத முதல் வாரத்தில் மலர் கண்காட்சி தொடங்கப்படும். </p><p>இந்த ஆண்டு தேர்தல் நடைமுறைகள் மற்றும் ஆட்சி மாற்றக் காலக்கட்டமாக இருந்ததால், கண்காட்சி நடத்தப்படுவதில் சிறிய காலதாமதம் ஏற்பட்டது. </p><p>குறிப்பாக, புதிய அரசின் அமைச்சர்கள் பதவியேற்பு மற்றும் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, மே 15-ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த தொடக்க விழா தள்ளிப்போனது. </p><p>மேலும், தேர்தல் காரணமாக இந்த ஆண்டு கோடை விழாவின் ஒரு பகுதியான காய்கறி கண்காட்சியும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. </p><p>இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் நீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 128-ஆவது மலர் கண்காட்சி வரும் மே 18-ஆம் தேதி (திங்களன்று) தொடங்குகிறது. </p><p>மே 18 முதல் மே 28 வரை (10 நாட்கள்). நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு மலர் கண்காட்சியை துவக்கி வைக்க உள்ளார். </p><p>கண்காட்சிக்காகப் பல லட்சம் மலர்களைக் கொண்டு பிரம்மாண்டமான அலங்காரங்கள் மற்றும் மலர் உருவங்கள் அமைக்கும் பணிகள் பூங்காவில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. </p><p>10 நாட்கள் நடைபெறவுள்ள இந்த விழாவால், கோடை விடுமுறையைக் கழிக்க வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர், சுகாதாரம் மற்றும் போக்குவரத்து வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.</p>
