தேசிய மருத்துவர்கள் தினம்: சிபிஎம் வாழ்த்து!
7 hours before
<p>தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி, இரவு - பகல் என்று பாராமல் சமூக நலனுக்காக மகத்தான பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.</p><p>இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:</p><p>"நோயாளிகளை குணப்படுத்தவும், உயிரைக் காப்பாற்றவும் தன்னலமற்ற முறையில் அயராது உழைக்கும் மருத்துவர்களின் மகத்தான தியாகத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இரவு - பகல் என்று பாராமல் சமூக நலனுக்காக மகத்தான பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது உளமார்ந்த மருத்துவர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.</p><p>மருத்துவத்துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. இதற்கு மருத்துவர்களின் தொண்டுள்ளமும், அர்ப்பணிப்பு உணர்வும், சேவையுமே முக்கிய காரணமாகும். குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவர்களின் அளப்பரிய பணிகள் என்றென்றும் போற்றுதலுக்குரியதாகும். அதேவேளையில் தமிழக மருத்துவர்கள் பணிச்சுமை போன்ற காரணங்களால் பெரும் மன அழுத்தத்தில் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உரிய ஊதியம் கேட்டு மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இக்கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கடந்த காலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு ஜனநாயக இயக்கங்களும், அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தியும் இதுவரை நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளது.</p><p>எனவே, தமிழகத்தில் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் மருத்துவர்களின் ஊதிய பிரச்சனை உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>
