குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல்
13 Jul 2026, 10:34 pm
<p><strong>குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல்</strong></p><p>நாமக்கல், ஜூலை 13- திருச்செங்கோடு அருகே ஒரு வாரமாக முறையாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கொக்கராயன்பேட்டை சாலை பொம்மக்கல்பாளையம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக முறையாக குடிநீர் வழங்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், பொதுமக்கள் திருச்செங்கோடு–கொக்கராயன்பேட்டை சாலையில் திங்களன்று மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த திருச்செங்கோடு ஊரக காவல்துறையினர் மற்றும் ஊராட்சி துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் தற்காலிகமாக பாதிப்பு ஏற்பட்டதாகவும், உடைந்த குழாய்கள் விரைவில் சீரமைக்கப்பட்டு இனிவரும் காலங்களில் தடையின்றி குடிநீர் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து, உடனடி தேவைக்காக இரண்டு லாரிகள் மூலம் சுமார் 14 ஆயிரம் லிட்டர் குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.</p>
