வாட்ஸ்அப் பயனர்களை உளவு பார்க்க முயற்சி: இஸ்ரேல் நிறுவனம் மீது மெட்டா அவமதிப்பு வழக்கு!
8 Jun 2026, 9:11 pm
<p>வாட்ஸ்அப் மற்றும் அதன் பயனர்களின் ரகசியத் தகவல்களை ஒருபோதும் உளவு பார்க்கக் கூடாது என்ற நீதிமன்றத்தின் நிரந்தரத் தடையுத்தரவை மீறியதற்காக, இஸ்ரேலிய உளவு மென்பொருள் நிறுவனமான<strong> NSO-விற்கு எதிராக</strong> அமெரிக்கக் கூட்டாட்சி நீதிமன்றத்தில் <strong>நீதிமன்ற அவமதிப்பு வழக்கு</strong> தொடரப்போவதாக மெட்டா (Meta) நிறுவனம் அறிவித்துள்ளது.</p><p>இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த உளவு மென்பொருள் நிறுவனமான NSO, வாட்ஸ்அப் செய்திச் சேவையைப் பயன்படுத்திப் புதிய <strong>'ஸ்பியர் ஃபிஷிங்' (Spear Phishing) </strong>தாக்குதல்களை நடத்த முயன்றதாகவும், அதனைத் தங்களது பாதுகாப்பு அமைப்பு கண்டறிந்து முறியடித்துள்ளதாகவும் மெட்டா நிறுவனம் திங்களன்று தெரிவித்துள்ளது.</p><p>முன்பு நடத்தப்பட்ட <strong>"1-கிளிக் ஃபிஷிங்"</strong> தாக்குதலைப் போன்றே இந்த புதிய முயற்சியும் அமைந்திருந்ததாக மெட்டா குறிப்பிட்டுள்ளது. இந்தத் தாக்குதலில், பயனர்கள் தங்களுக்கு வரும் இணைப்பு (Link) அல்லது கோப்பை ஒரே <strong>ஒருமுறை கிளிக் செய்தால் போதும்</strong>; அவர்களின் போன் அல்லது கணக்குகள் முற்றிலுமாக ஹேக் செய்யப்பட்டு, ரகசிய விவரங்கள் அனைத்தும் திருடப்பட்டுவிடும்.</p><p>இந்தத் தாக்குதலுக்காக NSO நிறுவனம் தனது தளத்தில் உருவாக்கியிருந்த சோதனைக் கணக்குகள் மற்றும் குழுக்களை வாட்ஸ்அப் கண்டறிந்து நீக்கியுள்ளது. இச்சம்பவம் குறித்துக் கருத்து கேட்கத் தொடர்பு கொண்டபோது NSO நிறுவனம் உடனடியாக பதிலளிக்க மறுத்து விட்டதாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>கடந்த ஆண்டு, மெட்டாவின் வாட்ஸ்அப் தளத்தை ஹேக் செய்வதை உடனடியாக நிறுத்துமாறும், <strong>167 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம்</strong> செலுத்தும்படியும் அமெரிக்க நீதிமன்றம் NSO-வுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்தத் தடை உத்தரவு தங்களை வணிக ரீதியாக முற்றிலும் முடக்கிவிடும் என்றும், அபராதத் தொகையைக் குறைக்கும்படியும் நீதிமன்றத்தில் NSO நிறுவனம் மன்றாடியது. இதனைத் தொடர்ந்து, அபராதத் தொகையை 4 மில்லியன் அமெரிக்க டாலராக நீதிமன்றம் குறைத்தது.</p><p><br></p><p>எனினும் அந்நிறுவனம் வாட்ஸ் அப் பயனர்களை <strong>தொடர்ந்து ஹேக் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது</strong>. இதனிடையே, NSO-வின் 'பெகாசஸ்' (Pegasus) ஹேக்கிங் மென்பொருள் மூலம் உலகளவில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து வருவதாகத் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.</p>
