தமிழ்நாட்டின் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க இடைக்கால தடை!
10 Jul 2026, 6:44 pm
<p>திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளில் ஜூலை 31-ஆம் தேதி வரை இடைத்தேர்தலை அறிவிக்க இடைக்காலத் தடை விதித்து தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு புதிய பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது சட்டரீதியான குழப்பத்தை ஏற்படுத்தும்; எனவே, திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி திருநெல்வேலியைச் சேர்ந்த கே.வெங்கடாசலபதி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம், தமிழ்நாடு சட்டமன்றச் செயலாளர், முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் உள்ளிட்டோர் ஜூலை 31-ஆம் தேதிக்குள் இது தொடர்பாக பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதுவரை 5 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தலை அறிவிக்க இடைக்காலத் தடை விதித்து தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.</p>
