சென்னை விரைவு செய்திகள்
24 Jan 2026, 3:38 pm
<p><strong>சென்னையில் மீண்டும் ‘மாடி பேருந்து’: சேவை துவக்கம்</strong></p>
<p>சென்னை, ஜன.24- சென்னை மாநகரின் அடையாளமாகத் திகழ்ந்த இரட்டை அடுக்கு பேருந்துகள் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சனிக்கிழமை முதல் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வருகின்றன. அசோக் லேலண்ட் மற்றும் ஹிந்துஜா அறக்கட்டளை பங்களிப்புடன் வழங்கப்பட்ட 20 நவீன மின்சார பேருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்த நிலையில், அதன் முறையான சேவை தொடங்கியது. வார நாட்களில் பொதுப் போக்குவரத்து பயணிகளுக்காகவும், வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளுக்காகவும் இப்பேருந்துகள் பயன்படுத்தப்படும். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் மெரினா கடற்கரை, சாந்தோம் தேவாலயம் உள்ளிட்ட முக்கிய இடங்களைக் காணும் வகையில் சிறப்புச் சுற்றுலா சேவை இயக்கப்பட உள்ளது. சாதாரண பேருந்துகளை விட ஒன்றரை மடங்கு அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட இதில், நகரின் அழகை ரசிக்கும் வகையில் பனோரமிக் பார்வை வசதி செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாவிற்கு பெரியவர்களுக்கு 200 ரூபாயும், குழந்தைகளுக்கு 150 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு முன்பதிவு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2008-ல் நிறுத்தப்பட்ட இந்த ‘மாடி பஸ்’ சேவை, தற்போது சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சாரத் தொழில்நுட்பத்துடன் மீண்டும் வந்திருப்பது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.</p>
