மதவெறி மாய்ப்போம்! மக்கள் ஒற்றுமை காப்போம்! சிபிஎம் நடைபயணம் செம்பனார்கோவிலில் நிறைவு: மக்கள் உற்சாக வரவேற்பு
16 Dec 2025, 3:51 pm
<p><strong>மதவெறி மாய்ப்போம்! மக்கள் ஒற்றுமை காப்போம்! சிபிஎம் நடைபயணம் செம்பனார்கோவிலில் நிறைவு: மக்கள் உற்சாக வரவேற்பு</strong></p>
<p>மயிலாடுதுறை, டிச.16- “மதவெறி மாய்ப்போம்...! மக்கள் ஒற்றுமையும், மாநில உரிமைகளையும் காப்போம்..!’’ என்ற முழக்கத்தோடு மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்று வரும் நடைபயணம் காழியப்பநல்லூர், துடரிப்பேட்டை, டி. மணல்மேடு வழியாக திருக்கடையூர் வந்தடைந்து, தெருமுனை பிரச்சாரக்கூட்டத்துடன் திங்களன்று நிறைவடைந்தது. இந்நிலையில் 3 ஆவது நாளான செவ்வாயன்று செம்பனார்கோவில் ஒன்றியம் ஆக்கூரில் உற்சாகத்துடன் துவங்கியது. பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் கே.பி. மார்க்ஸ் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர்கள் சுதாமன், ஜான்சன் உள்ளிட்டோர் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது. ஆக்கூர் ஜமாத் சார்பில் ஜமாலுதீன் உள்ளிட்டோர் பயனாடை அணிவித்து வரவேற்றனர். நடைபயணத்திற்கு தலைமை வகித்து வழிநடத்தும் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி. சிங்காரவேலன் ஆகியோர் உரையாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆக்கூர் முக்கூட்டில் கிளைச் செயலாளர் அமுதா தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது. அப்பராசப்புத்தூர் கிராம மக்கள் அளித்த வரவேற்பை தொடர்ந்து தலைச்சங்காட்டில் தோரணங்கள் கட்டி, பட்டாசு வெடித்து முழக்கமிட்டு கிளைச் செயலாளர் செந்தில் தலைமையிலும், கருவி, கிடாரங்கொண்டான், கீழையூர் பொன்செய் கிராமங்கள் சார்பில், கிளைச் செயலாளர் சமரசம் தலைமையில் மலர்தூவி, பட்டாசு வெடித்து முழக்கங்கள் எழுப்பி வரவேற்றனர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கபிலன், தெட்சிணாமூர்த்தி, எம்.எஸ். ராஜேந்திரன் மற்றும் வாலிபர் சங்க நிர்வாகிகள் நடைபயணத்தை வரவேற்றனர்.</p>
