நாட்டு முடியா? நாற்று முடியா? - * ப.முருகன்
30 May 2026, 10:24 pm
<p><strong>நாட்டு முடியா? நாற்று முடியா? - * ப.முருகன்</strong></p><p>ஏரு பெருசா இந்த ஊரு பெருசா - சொல்லடி / நெல்லு பெருசா பயக சொல்லு பெருசா.... என்பது ஒரு திரையிசைப் பாடல் . கவிச்சக்கரவர்த்தி கம்பரும் கூட மன்னர் மணிமுடி யை விட உழவரின் நாற்று முடியே சிறந்தது என்கி றார். </p><p>அதாவது நாட்டு முடியை விட நாற்று முடி சிறந்தது என்கிறார். </p><p>அவர் எழுதிய “ஏரெழுபது “ எனும் நூலில் உழவின் துவக்கநிலை முதல் நிறைவு நிலை வரை உள்ள ஒவ்வொரு செயலையும் அதன் அம்சங்களையும் எழுபது பாடல் களில் விளக்குகிறார். அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு தலைப்பும் கொடுத்துள்ளார். </p><p>அவற்றை - அதாவது அந்தத் தலைப்புகளைச் சொன்னாலே நீண்டுவிடும். </p><p>இது தவிர நூலின் பாயிரமாக ஒன்பது பாடல்கள் பாடி யுள்ளார். மொத்தத்தில் 79 பாடல்களைக் கொண்டுள்ளது ஏரெழுபது. </p><p> “தொழுங்குலத்திற் பிறந்தாலென் சுடர்முடி மன்ன வராகி / எழுங்குலத்திற் பிறந்தாலென் இவர்க்குப்பின் வணிகரெனுஞ் / செழுங்குலத்திற் பிறந்தாலென் சிறப்பு டைய ரானாலென் / உழுங்குலத்திற் பிறந்தாரே உலகுய் யப் பிறந்தாரே “ (ஏரெழுபது ... பாடல் 8) என்கிறார் “வேளா ளர் சிறப்பு “எனும் தலைப்புப் பாடலில். </p><p>நால் வருணத் திலும் மேல் வருணம் எனப் பாடலில் புகழ்ந்திருக்கிறார். சமூக நிலைமை அப்போது என்னவாக இருந்திருக்கும்? யூகியுங்கள். </p><p>ஆனால் உண்மையில் பிராமணர்களோ, நாலாஞ்சாதிப் பயலே என உழவர்களைத் திட்டியிருப்பது தான் நடந்திருக்கும். “</p><p>மாணிக்க முதலாய மணியழுத்தித் தொழில் சமைத்த / ஆணிப்பொன் முடிவேந்தர் அணிமுடியு முடியாமோ? / பேணிப்பைங் கோலமுடி பெருக்காளர் சுமவாரேல் / சேணுக்குந் திசைப்புறத்து செங்கோன்மை செல்லாதே ! “ என்கிறார் கம்பர் “நாற்று முடி சுமந்த சிறப்பு “எனும் பாடலில். </p><p> அடுத்து வரும் “உரிய இடத்தில் முடி சேர்த்தலின் சிறப்பு “எனும் பாடலைப் பாருங்கள்.</p><p> “தென்னன்முடி சேரன்முடி தெங்குபொன்னி நாடன்முடி / கன்னன் முடி கடல்சூழ்ந்த காசினியோர் தங்கண்முடி / இன்னமுடி யன்றியுமற் றெடுத்துரைத்த முடிகளெல்லாம் /மன்னுமுடி வேளாளர் வயலின் முடி கொண்டன்றோ? “ என்கிறார் கம்பர். </p><p>“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் / உழன்றும் உழவே தலை “ என வள்ளுவர் உழவைப் புகழ்ந்துரைத்தார். </p><p>“உழுவார் உலகுக்கு அச்சாணி “என்றார். </p><p>“உழவினார் கைமடங்கின் இல்லை விழைவதும் / விட்டேம் என்பார்க்கும் நிலை “ என்கிறார் வள்ளுவர். அதாவது உழவர்களின் கை உழாது மடங்கிவிடுமானால் யாவரும் விரும்பும் உணவை யும் கைவிட்டோம் என்று துறந்தவர்க்கும் அவ்வறத்தில் நிலைத்து நிற்க முடியாது என்பதாகும். க</p><p>ம்பர் இன்னும் ஒரு படி மேலே போகிறார். “வெய்யகலி வலிதொலைக்கும் வேளாளர் விளைவயலிற் / செய்யின்முடி விளம்பாரேல் விளம்பு வன சிலவுளவோ? / மையறுமந் தணர்விளம்பார் மறைமனுமன்னவர் விளம்பார் / ஐயமறு புலவோரும் அருந்தமிழ் நூல்விளம்பாரே!” என்று “நடவு மங்கலப் பாட்டின் சிறப்பு” எனும் பாடலில் கூறுகிறார்.</p><p> வயலில் நாற்று முடி விளம்பாவிட்டால் அதாவது நடவு செய்வதற்காக வயலின் (செய்யின் ) சேற்றுப் பரப்பில் நாற்று முடிகளை எடுத்து வீசிப் பரப்பினால் தான் நாற்று நடுபவர்களின் கைகளுக்கு தோதாக - உதவியாக இருக்கும். </p><p>அப்போதுதான் வயலில் நாற்று நடுபவர்கள் சீராக நட முடியும். சீராக நடவு செய்தால் தான் பயிர் சீராக வளரும். </p><p>விளைச்சலும் சீரும் சிறப்புமாக இருக்கும். எனவே இது - நாற்று முடி விளம்புதல் - வேளாண்மையில் மிக முக்கியமானதாகும்.</p><p> எவ்வளவு சிறப்புடையது என புகழப்பட்டாலும் மிக நீண்டகாலமாகவே உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது என்பது தான் நிலை. </p><p>அதனால் உழவர்கள் ஊருக்கெல்லாம் உணவளித்தாலும் அவர்கள் உழவடை செய்ய - விவசாயம் செய்ய - அடுத்தவரிடம் கையேந்தும் அதாவது கடன் வாங்கும் நிலையில் தான் விவசாயிகள் உள்ளார்கள். எவ்வளவு சிரமப்பட்டாலும் அவர்கள் தங்கள் உழவுப் பணியை கைவிடுவதில்லை. அதனால், “அழுது கொண்டி ருந்தாலும் உழுது கொண்டிரு” என்னும் முதுமொழி நிலவுகிறது. </p><p>கடன் வாங்கி விவசாயம் செய்து அது கட்டுபடி யாகாமல் போவதால் மீண்டும் மீண்டும் கடன் வாங்கும் சுழலுக்குள் சிக்கிக்கொள்கிறார்கள். </p><p>ஆனாலும் பழைய கடனை அடைக்க புதிய கடன் என்று அவர்கள் வாழ்க் கையே கடனிலேயே மூழ்கிவிடுகிறது. </p><p>“கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் “என்று கம்பர் இராமாயணத்தில் இராவணன் பற்றிக் கூறியது உழவர்களுக்கு மிகவும் பொருந்திப் போகிறது. </p><p>ஆனால் ஆட்சியாளர்கள் தான் உழவர்களுக்கு உண்மை யிலேயே உதவ மனமில்லாமல் இருக்கிறார்கள். </p><p>ஆனால் உதவுவது போல காட்டிக்கொள்வதில் தயங்குவதே இல்லை. </p><p>அவர்கள் ஏற்கெனவே சொன்னதைச் செய் வதே இல்லை. ஆனால் சமாளிப்பு வேலைகளையே செய்கிறார்கள்.</p><p> மண்ணிலே முத்தெடுத்து பிறர்வாழ வழங்கும் குணமுடைய விவசாயிகள், விக்கிரமாதித்யனைப் போல் விடாமல் முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு காலம் வரும் என்ற நம்பிக்கையில் நாளைக் கழிக்கிறார்கள்.</p><p> உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உழவை வாழவைக்கிறார்கள்.</p>
