காற்றில் என்றும் உந்தன் கீதம்... - ஈரோடு மு.சங்கரன்
12 Jul 2026, 10:03 pm
<p><strong>காற்றில் என்றும் உந்தன் கீதம்... - ஈரோடு மு.சங்கரன்</strong></p><p>பண்பாடும் நீலக்குயிலே! கொஞ்சம் சங்கீதம் கற்றுத் தந்த ஞானக் குயிலே! ஏழிசை கீதமும் உன்னிடம் சங்கமம், எங்கள் மனமும் மெய்யும் என்றென்றும் கேட்கும் உன் லயம்...</p><p>உன் குரல் கேட்ட பின்புதான் குயிலின் கூவலும் இப்படித்தான் இருக்குமோவெனக் கணித்தோம் நாங்கள்!</p><p>பாடலாசிரியர்கள் எழுதுவார்கள் அவ்வளவே... அப்பாடலை நீ பாடக் கேட்க அனைவரும் எழுவார்கள்...</p><p>அழகிய கண்ணே! என நீ பாடத் துவங்க கல்மனமும் கரையுமே! ஆயிரம் தாமரை மொட்டுகளும் கட்டவிழ்ந்து மலருமே! தூக்கமும் கண்களைத் தழுவுமே! தூங்காத விழிகளும் துணை தேடி அலையுமே!</p><p>எத்தனை உணர்ச்சிகளுக்கு உருவம் கொடுத்தாய் நீ! அத்தனை உருவங்களும் எங்கள் வீடுகளில் ஏகாந்தமாய் அலைகின்றன...</p><p>மக்கள் விருதே பெரிதெனக் கூறி, மத்திய அரசின் விருதை மறுத்த சுயமரியாதைக்காரி நீ!</p><p>சிணுங்கலுக்கும் இலக்கணம் வகுத்தாய்! சிரிப்பிலும் ஒரு முத்திரை பதித்தாய்! சன்னமான குரலில் நீ பாடிய ரகசியங்கள், மௌனமான நேரத்தில் உன் குரலின் மந்தகாசங்கள், இவற்றால் கழியும் எம் இனிமைப் பொழுதுகள்...</p><p>காதலாகிக் கசிந்துருகி, குழந்தையாய்க் குழைந்து கூவி, கிழவியாய் நடுங்கிப் பாடி அத்தனை வயதினரையும் உன் குரலில் அடைத்தாய்! சின்ன வண்ணக்குயிலாய் அழைத்தாய்!</p><p>பொன்வானம் பன்னீர் தூவும் நேரமும், காலை நேரப் பூங்குயில் கானம் இசைக்கும் கணத்திலும், மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் பாடும் வேளையும், ஊரு சனம் தூங்கிடும் பொழுதிலும் உன் கானமே எமக்கு இன்பம் தருமே!</p><p>காற்றே உன் கீதமாய்த்தான் நாளும் பேசுகிறது... செங்கதிரும் நிலவும் உந்தன் இசையாய் ஒளி வீசுகிறது... <strong> - ஈரோடு மு.சங்கரன்</strong></p>
