சென்னை விரைவு செய்திகள்
6 Mar 2026, 3:17 pm
<p><strong>காலமானார்</strong></p>
<p>கடலூர், மார்ச் 6- கடலூர் குப்பன்குளம் சிபிஐ(எம்) முன்னாள் கிளைச் செயலாளர் ராஜாவின் தாயார் சந்திரா வெள்ளிக்கிழமை காலமானார். அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாநகரச் செயலாளர் அமர்நாத், மாநகர் குழு உறுப்பினர்கள் தமிழ்மணி, பழனி, வாலிபர் சங்க நகரத் தலைவர் ஆகாஷ், மற்றும் பெருமாள், மகேஷ், ஜோதி ஆகியோர்</p>
<p><strong>கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி</strong></p>
<p>விழுப்புரம், மார்ச் 6- விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்குத் திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தகவல் தெரிவித்துள்ளார். தாட்கோ மூலம் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து உலகத் தர உணவு சேவை மற்றும் சூழலியல் சுற்றுலா, ஆடை வடிவமைப்பு மற்றும் மேலாண்மைத் திறன் பயிற்சி, அழகுக்கலை மற்றும் சிகை அலங்கார மேலாண்மை ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இப்பயிற்சியினைப் பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.</p>
<p><strong>தோஷம் கழிப்பதாகக் கூறி மூதாட்டியிடம் நகை பறிப்பு</strong></p>
<p> விழுப்புரம், மார்ச் 6- விழுப்புரம் அருகே விழுப்புரம் மாவட்டம், வளவனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெங்கராம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது மனைவி அமராவதி (70). இவர் கடந்த வியாழக்கிழமை அன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி, மூதாட்டியிடம் நைசாகப் பேச்சுக் கொடுத்து, உங்களுக்குத் தோஷம் இருப்பதாகக் கூறி அந்தத் தோஷத்தைக் கழிப்பதாகத் தொடர்ந்து பேசியுள்ளார். இதனை நம்பிய அமராவதி, தான் அணிந்திருந்த ஐந்து பவுன் சங்கிலியை அந்த நபர் நீட்டிய சொம்பில் போட்டுள்ளார். தொடர்ந்து அந்த ஆசாமி அமராவதியை அருகில் உள்ள கோயிலைச் சுற்றி வருமாறு கூறியுள்ளார். அமராவதியும் கோயிலைச் சுற்றிவிட்டு வந்து பார்த்தபோது அந்த நபரைக் காணவில்லை. பின்னர் தான் தோஷம் கழிப்பதாகக் கூறி அவர் ஐந்து பவுன் செயினை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார் என்பது தெரியவந்து கூச்சலிட்டார். இது குறித்து வளவனூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
