இதழ்சிரிப்பால்... - கோவி.பால.முருகு
12 Sept 2026, 8:49 pm
<p><strong>இதழ்சிரிப்பால்... - கோவி.பால.முருகு</strong></p><p><br></p><p>இதழ்சிரிப்பால் கண்களிலே புகுந்து கொண்டாய் </p><p><br></p><p>இன்னிசையின் மொழியாலே மனத்தைக் கொண்டாய் </p><p><br></p><p>பளிங்குக்கண் பார்வையாலே பற்றிக் கொண்டாய் </p><p><br></p><p>பல்லழகு முத்தானப் பரிசைக் கொண்டாய் </p><p><br></p><p>மெல்லுடலை அணைத்திடவே மேனி கொண்டாய் </p><p><br></p><p>மென்பஞ்சு பாதத்தின் நடையைக் கொண்டாய் </p><p><br></p><p>கைவிரலின் பரிசத்தில் கிறக்கம் கொண்டாய் </p><p><br></p><p>கண்ணம்மா உன்னிடத்தில் சொர்க்கம் கொண்டாய்! </p><p>என்குலத்தைச் செழிக்கவந்த என்றன் மகளே! </p><p><br></p><p>என்குடும்பம் மகிழ்ந்திடவே பிறந்த தாயே! </p><p><br></p><p>உன்வரவால் பெற்றயின்பம் கோடி கோடி </p><p><br></p><p>உன்வாசம் வீடெல்லாம் பரவும் தேடி </p><p><br></p><p>மண்ணகத்தில் நீவளர்ந்து விருட்ச மாவாய் </p><p><br></p><p>விண்ணகமும் உன்புகழால் ஒளிர்ந்து நிற்கும் </p><p><br></p><p>பகுத்தறிவுச் சுடரேந்தும் பண்பை ஏற்பாய் </p><p><br></p><p>பைந்தமிழாய் மெருகுற்று வாழ்வாய் கண்ணே! </p><p><br></p><p>இவையெல்லாம் எனக்குவேண்டும் என்றன் உயிரே! </p><p><br></p><p>இயலுமுன்னால் எழுந்திடுவாய் சிங்கப் பெண்ணே! </p><p><br></p><p>பெயர்சொன்னால் நாவினிக்கும் கரும்புச் சாறே </p><p><br></p><p>பேர்புகழால் மனமினிக்கச் செய்வாய் கண்ணே! </p><p><br></p><p>பெண்ணென்றால் சக்தியென்று உரக்கச் சொல்வாய் </p><p><br></p><p>பேரறிவால் ஆதிக்கச் சூழ்ச்சி வெல்வாய்! </p><p><br></p><p>ஓவியமே காவியமே அமுதே தேனே </p><p><br></p><p>ஒப்புமைக்கும் எட்டாத கண்ணே வாழ்க!</p>
