இலங்கை துறைமுகத்தை சீரமைக்க இந்திய நிதி
17 Jan 2026, 2:42 pm
<p><strong>இலங்கை துறைமுகத்தை சீரமைக்க இந்திய நிதி</strong></p>
<p>கொழும்பு,ஜன.17- 544 கோடி ரூபாய் இந்திய நிதியுதவியுடன் இலங்கையின் காங்கேசன் துறைமுகம் சீரமைக்கப்படும் என்று இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு அருகே உள்ள சாவகச்சேரியில் “ஒரு அழகிய வாழ்வு 2026” என்ற இலங்கை அரசின் தேசிய வீடு திட்டத்தின் துவக்க விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டு அந்நாட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பேசியதாவது, இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. அவை சேதமடைந்து நீண்ட காலம் கடந்து விட்ட போதிலும் அவ்வீடுகள் முழுமையாக கட்டப்படவில்லை. யாழ்ப்பாண மாவட்டத்தில் வசித்த மக்கள் போரின்போது இடம்பெயர்ந்தனர் என்பதை நான் அறிவேன். போருக்குப் பின்னரும் கூட அவர்கள் இடம்பெயர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். ஒரு குடும்பம் நீண்ட காலம் வீடு இன்றி வாழ்வது நியாயமே அல்ல. போரினால் இடம்பெயர்ந்தவர்கள் வீடின்றி தவிக்கும் பிரச்சனைகள் எங்களது ஆட்சிக்காலத்தில் தீர்த்து வைக்கப்படும். அழகிய கடற்கரையையும், பல சுற்றுலா அம்சங்களையும் கொண்டுள்ள யாழ்ப்பாண மாவட்டம் சுற்றுலாத் துறையை மேலும் விரிவுபடுத்துவதற்கு அதிக சாத்தியக்கூறுகளை கொண்டுள்ளது. மேலும் பலாலி விமான நிலையத்தில் உள்ள குறைபாடுகளை சிக்கல்களை கண்டறிந்து அதனையும் சரி செய்வதற்காக திட்டமிட்டுள்ளோம். அதேபோல காங்கேசன் துறைமுகத்தை சீரமைப்பதற்கான பணிகளும் மிக விரைவில் துவங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.544கோடி நிதியுதவி வழங்குவதற்கு இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது என தெரிவித்தார். </p>
