பேராபத்தான சகாப்தத்தில் இந்தியா: வெறுப்பு அரசியலின் பின்னணி
10 May 2026, 9:15 pm
<p><strong>பேராபத்தான சகாப்தத்தில் இந்தியா: வெறுப்பு அரசியலின் பின்னணி</strong></p><p>இந்தியா ‘வெறுப்புப் பரிசோதனை மையம்’ (India Hate Lab) என்ற ஆய்வு அமைப்பு வெளியிட்ட விரிவான அறிக்கையின் தமிழ் மொழியாக்கமே பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள ‘வெறுப்புப் பேச்சுகளால் துண்டாடப்படும் இஸ்லாமோஃபோபியா’ என்னும் இந்நூல். மால்கம் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ள இப்புத்தகம், இந்தியாவில் திட்டமிட்டுப் பரப்பப்படும் வெறுப்பு அரசியலைத் தரவுகளுடன் அம்பலப்படுத்துகிறது. </p><p><strong>வெறுப்புப் பேச்சுகளின் உளவியல்</strong> </p><p>வெறுப்புப் பேச்சுகளுக்குப் பின்னால் உள்ள உளவியலை இந்நூல் நுட்பமாக விளக்குகிறது. ‘லவ் ஜிகாத்’, ‘மக்கள் தொகை ஜிகாத்’, ‘எச்சில் ஜிகாத்’ எனப் புனையப்படும் போலிச் சதி கோட்பாடுகள் (Conspiracy Theories) மூலம் பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும், சிறுபான்மையினர் மீது ஆழமான வெறுப்பையும் விதைக்கும் சூழ்ச்சிகளை இது விவரிக்கிறது.</p><p><strong>அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள்</strong> </p><p>2024 நாடாளுமன்றத் தேர்தல் காலத்தைவிட, 2025-ஆம் ஆண்டில் வெறுப்புப் பேச்சுகளின் வீரியம் 13 சதவீதம் அதிகரித்துள்ளது. 2023-ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது இது இரண்டு மடங்காக உயர்ந்திருப்பது கவலைக்குரியது. பாஜக ஆளும் மாநிலங்களில், ஆட்சி அதிகாரத்தையே வெறுப்புப் பிரச்சாரத்திற்கான கருவியாகப் பயன்படுத்துவதை இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பிரதமர் முதல் அமைச்சர்கள் மற்றும் காவி உடை அணிந்த சாமியார்கள் துறவிகள் வரை இதில் ஈடுபடும் விதம் துல்லியமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. </p><p><strong>சமூக ஊடகங்களின் ஆதிக்கம்</strong> </p><p>முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் ‘X’ தளம் போன்றவை வெறுப்புப் பிரச்சாரத்தின் முதன்மை விநியோகஸ்தர்களாக மாறியுள்ளன. குறிப்பாக ‘மெட்டா’ (Meta) நிறுவனத்தின் செயல்பாடுகளை இந்நூல் கடுமையாக விமர்சிக்கிறது. வெறுப்புப் பேச்சுகளை நேரலையாக வெளியிட்ட பிறகு, அவற்றை நீக்குவதற்குக் கூட ஒரு மாத காலம் எடுத்துக்கொள்ளும் போக்கு, வன்முறையைத் தூண்டுவதற்கு வழிவகுக்கிறது. இதனுடன் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமும் தற்போது வெறுப்புப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்படுவதை நூல் எச்சரிக்கிறது. </p><p><strong>அரசியல் கொதிநிலை</strong></p><p> 2024 தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையை இழந்த பிறகும், தனது வெறுப்பு அரசியல் பாதையிலிருந்து அது பின்வாங்கவில்லை; மாறாக, அதனை மறுசீரமைப்பு செய்து தீவிரப்படுத்தியுள்ளது. அரசியல் களத்தை எப்போதும் ஒரு கொதிநிலையில் வைத்திருப்பதன் மூலம் வாக்குகளை ஒருங்கிணைக்க முடியும் என்ற ஆளும் வர்க்கத்தின் நம்பிக்கையை முறியடிக்க, அதன் தந்திரங்களைப் புரிந்துகொள்வது அவசியம். மக்களை நேசிக்கும் அனைவரும், துண்டாடப்படும் இந்தியச் சமூகத்தைக் காக்க அவசியம் வாசிக்க வேண்டிய தரவுப் பெட்டகம் இது. </p><p><strong>வெறுப்புப் பேச்சுகளால் தூண்டப்படும் இஸ்லாமோஃபோபியா தமிழில்: மால்கம் வெளியீடு: பாரதி புத்தகாலயம் பக்கங்கள்: 72 | விலை: ₹80 தொடர்புக்கு: 9444567935</strong></p>
