சித்தாந்தமே எங்களை வழி நடத்துகிறது! முழு ஒற்றுமையுடன் பணியாற்றுவோம்!
26 Mar 2026, 2:46 pm
<p><strong>சித்தாந்தமே எங்களை வழி நடத்துகிறது! முழு ஒற்றுமையுடன் பணியாற்றுவோம்!</strong></p>
<p><strong>சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் நேர்காணல்</strong></p>
<p>கேள்வி: கடுமையான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, உங்கள் கூட்டணி வலுவான பிணைப்பைக் கொண்டிருப்பதாகக் கூறியும், ஐந்து இடங்களுக்கு எப்படிச் சம்மதித்தீர்கள்? பதில்: கூட்டணியில் பல புதிய கட்சிகள் இணைந்துள்ளன. இப்போது சுமார் 26 கட்சிகள் உள்ளன. மக்களவைத் தேர்தலின் போது சில சிறிய கட்சிகள் எங்களுக்கு ஆதரவளித்தன, ஆனால் அப்போது அவர்களுக்கு இடங்கள் வழங்கப்படவில்லை. இப்போது அவர்களுக்கும் இடங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு கண்ட மிகப்பெரிய கூட்டணிகளில் இதுவும் ஒன்று. பாஜக-அதிமுக கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்களது முக்கிய குறிக்கோள் என்பதால் இதற்குச் சம்மதித்தோம். எங்களைப் பொறுத்தவரை, இடங்களின் எண்ணிக்கையை விட அரசியல் சித்தாந்தமே முக்கியமானது. கேள்வி: குறைவான இடங்கள் உங்கள் தோழர்களின் மன உறுதியைப் பாதிக்காதா? பதில்: எங்கள் தோழர்கள் கூடுதல் இடங்களையும், போட்டியிட அதிக வாய்ப்புகளையும் எதிர்பார்க்கிறார்கள்; பேச்சுவார்த்தையின் போது அதற்காக நாங்கள் போராடினோம். ஏற்கெனவே எங்களுக்கு மிகக் குறைந்த இடங்களே ஒதுக்கப்பட்டிருந்தன. அதை மேலும் குறைத்தது வருத்தத்தை அளித்தது. இருப்பினும், எங்கள் கட்சியினர் சித்தாந்தத்தால் வழிநடத்தப்படுபவர்கள். ஒரு முடிவு எடுக்கப்பட்டால், அதை நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்வோம். ஆரம்பத்தில் சிறிய ஏமாற்றங்கள் இருக்கலாம். ஆனால் ஒப்பந்தத்திற்குப் பிறகு, எங்கள் தோழர்கள் முழு ஒற்றுமையுடன் பணியாற்றுவார்கள். கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய அவர்கள் 100% உழைப்பார்கள். கேள்வி: குறைவான இடங்கள் உங்கள் கட்சியின் எதிர்கால வளர்ச்சியைப் பாதிக்குமா? பதில்: இல்லை. எங்களிடம் எத்தனை எம்பிக்கள் அல்லது எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் சேருவதில்லை. உதாரணமாக, 2004 இல் எங்களுக்கு 61 எம்பிக்கள் இருந்தனர், ஆனால் அது எங்கள் வளர்ச்சியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. சில சமயங்களில் எங்களிடம் மிகக் குறைவான எம்எல்ஏக்களே இருந்தனர். அப்போதும் கட்சி சுறுசுறுப்பாகவே இருந்தது. மக்களின் பிரச்சனைகளுக்காக நாங்கள் எப்படிப் போராடுகிறோம் என்பதைப் பொறுத்தே எங்களது வளர்ச்சி அமைகிறது. அது மக்கள் நலனுக்கான எங்களது போராட்டங்களைச் சார்ந்தது, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் எண்ணிக்கையைச் சார்ந்தது அல்ல. கேள்வி: 2021 இல் திமுக அளித்த சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அது பாதிப்பை ஏற்படுத்துமா? பதில்: இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சியும் தனது வாக்குறுதிகளை 100% நிறைவேற்றியதில்லை. இது எங்களுடையது உட்பட அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும். ஆனால் பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றுவது ஒரு பெரிய சாதனை. பல நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைந்துள்ளன. அது அவர்களுக்கு ஓரளவுக்குத் திருப்தியைத் தந்துள்ளது. மீதமுள்ள வாக்குறுதிகள் வரும் ஆண்டுகளில் நிறைவேற்றப்படலாம். மக்கள் இதை உணர்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். கேள்வி: நீங்கள் போட்டியிட்ட ஆறு இடங்களில் நான்கில் உங்கள் கட்சி தோல்வியடைந்தது. இப்போது உங்கள் திட்டம் என்ன? பதில்: கடந்த தேர்தலில், நாங்கள் வலுவாக இருக்கும் தொகுதிகள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. இடங்களின் எண்ணிக்கையில் திருப்தி இல்லாததால் நாங்கள் தாமதமாகவே கூட்டணியில் இணைந்தோம். நாங்கள் சம்மதிப்பதற்குள், நாங்கள் விரும்பிய பெரும்பாலான தொகுதிகள் மற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டன. திமுக பலவீனமாக இருந்த கடினமான தொகுதிகளில் கூட நாங்கள் போட்டியிட வேண்டியிருந்தது. எனவே, அந்த முடிவுகளை வைத்து எங்கள் கட்சியின் பலத்தை மதிப்பிடக் கூடாது. இந்த முறை வலுவான தொகுதிகளைக் கேட்டுள்ளோம். மேலும், இப்போது கூட்டணி முன்பை விட வலுவாக உள்ளது. நலத்திட்டங்கள், தமிழகத்தில் நிலவும் பாஜக எதிர்ப்பு மனநிலை மற்றும் ஒன்றிய அரசு மீதான மக்களின் கோபம் ஆகியவை நாங்கள் சிறப்பாகச் செயல்பட உதவும். கேள்வி: சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற உங்கள் தொடர்ச்சியான கோரிக்கைகள் மற்றும் போராட்டங்களுக்குப் பிறகும், தற்போதைய அரசு இன்னும் அதைச் செய்யவில்லையே? பதில்: ஆணவக் கொலை என்பது சட்டம் - ஒழுங்கு பிரச்சனை மட்டுமல்ல. இது சாதி மற்றும் சாதிய மனப்பான்மையுடன் தொடர்புடைய சமூகப் பிரச்சினையும் கூட. இருப்பினும், எங்களது அழுத்தத்தின் காரணமாக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு தீவிரமான பிரச்சினை என்பதை அங்கீகரிப்பதே கடினமாக இருந்தது. இப்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சட்டம் இயற்றப்படும்என்று நம்புகிறோம். அது தாமதமானாலும், அதற்காக நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம். கேள்வி: இளைஞர்கள் உங்களைப் போன்ற சித்தாந்தம் சார்ந்த கட்சிகளை விட, புதிய கட்சிகளில் சேரவே அதிக ஆர்வம் காட்டுவது போல் தோன்றுகிறதே? பதில்: இன்று சிலர் அரசியலை அழுக்காகப் பார்த்து அதிலிருந்து விலகி இருக்கிறார்கள். சிலர் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழியாகப் பார்க்கிறார்கள். ஆனால் எங்களது கட்சி சமூக மாற்றம் மற்றும் சமத்துவத்திற்காகப் போராடுகிறது. மாற்றத்திற்கு தீவிரமான போராட்டம் தேவை என்று நாங்கள் நம்புகிறோம். பல இளைஞர்கள் விரைவான முடிவுகளை விரும்புகிறார்கள். உடனடி வெற்றியைத் தேடுகிறார்கள். அது சாத்தியமாகும் என்று எண்ணி அவர்கள் புதிய கட்சிகளை நோக்கிச் செல்கிறார்கள். இருப்பினும், பல்வேறு முயற்சிகள் மூலம் அவர்களை எங்கள் இயக்கத்திற்குள் கொண்டு வர செயலாற்றி வருகிறோம். அதில் நாங்கள் இன்னும் முழுமையாக வெற்றி பெற வேண்டியுள்ளது. கேள்வி: தொழிற்சங்கங்கள் பலவீனமடைந்து வருகின்றன, இளைஞர்கள் சித்தாந்தத்தில் குறைந்த ஆர்வமே காட்டுகிறார்கள். அவர்களை இடதுசாரி சித்தாந்தத்தை நோக்கி ஈர்க்க உங்கள் திட்டம் என்ன? பதில்: உலகமயமாக்கலுக்குப் பிறகு பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொழிற்சங்கங்கள் தேவையில்லை என்று அரசாங்கங்களும் நிறுவனங்களும் கூறுகின்றன. ஆனால் தொழிலாளர் மீதான சுரண்டல் உண்மையில் அதிகரித்துள்ளது. வேலை நேரம் அதிகமாகியுள்ளது, வேலை பாதுகாப்பு குறைந்துள்ளது. இது ஐடி துறைக்கும் பொருந்தும். சுரண்டல் இருக்கும் வரை மக்கள் ஒன்று கூடிப் போராடுவார்கள். அதுவே கம்யூனிசத்தின் பலம். தென் அமெரிக்கக் கண்டம் உட்பட பல நாடுகளில் இடதுசாரி இயக்கங்கள் வளர்ந்து வருகின்றன. இந்தியா மட்டும் எப்போதும் விதிவிலக்காக இருக்க முடியாது. சமத்துவமின்மையும் சுரண்டலும் இருக்கும் வரை, கம்யூனிசம் பொருத்தமானதாகவும் தேவையுள்ளதாகவும் இருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். நன்றி : தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 25.3.26</p>
