ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க வேண்டும் என்ற உத்தரவு ரத்து! - உயர் நீதிமன்றம்
6 Jun 2026, 5:06 pm
<p>கிளாம்பாக்கத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என மாநில போக்குவரத்து ஆணையம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.</p><p>சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகள் நகருக்குள் நுழையக்கூடாது, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து தான் இயக்கப்பட வேண்டும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மாநில போக்குவரத்து துறை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.</p><p>இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்கள் சார்பிலும், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.</p><p>இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், போரூர், சூரப்பேடு, மாதவரம் ரவுண்டானா பகுதிகளிலும் பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதி வழங்கியதோடு, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்குள் சென்று பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும் என இடைக்கால உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.</p><p>இதை தொடர்ந்து நடைபெற்ற இறுதி விசாரணையில், தமிழ்நாடு மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி, பேருந்து முனையம் அமைக்க மாநில போக்குவரத்து ஆணையத்தின் ஒப்புதல் கோரி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் விண்ணப்பிக்க முடியாது; சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு தான் விண்ணப்பிக்க முடியும் என்பதால், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு ஒப்புதல் கோரி காட்டாங்குளத்தூர் பஞ்சாயத்து யூனியன், மாநில போக்குவரத்து ஆணையத்துக்கு விண்ணப்பிக்கலாம் என நீதிபதி வி.லட்சுமி நாராயணன் உத்தரவிட்டுள்ளார்.</p><p>மேலும், கிளாம்பாக்கத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என மாநில போக்குவரத்து ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.</p><p><br></p>
