‘மென்மையான’ முகமூடியைப் பார்த்திருக்கிறீர்களா? - சூரஜ் ஷாஜி
1 Mar 2026, 4:03 pm
<p><strong>‘மென்மையான’ முகமூடியைப் பார்த்திருக்கிறீர்களா?</strong></p>
<p><strong>பெண்ணுரிமை பேசும் இடமெல்லாம் இன்று ஒரு புதிய குரல் ஒலிக்கிறது. அது ஆவேசமாகப் பெண்ணியத்தை எதிர்க்கவில்லை; மாறாக, “பெண்ணியம் எல்லை மீறுகிறது”, “ஆண்கள் பாதிக்கப்படுகிறார்கள்” என்று மிகவும் மென்மையான, ‘பண்பான’ குரலில் பேசுகிறது. கேரளாவின் ராகுல் ஈஸ்வர் போன்ற; தன் நாட்டிலும் பலரது ஊடகப் பிம்பங்கள் உருவாக்கும் இந்த ‘மென்மையான ஆணாதிக்க’ அரசியல், உண்மையில் பெண்ணுரிமை சட்டங்களையும் போராட்டங்களையும் எப்படிச் சிதைக்கின்றன என்பதை இந்தக் கட்டுரை அலசுகிறது.</strong></p>
<p>கேரள ஊடகச் சூழலில் ராகுல் ஈஸ்வர் போன்றவர்களின் தலையீடு ஒரு முக்கியமான மாற்றத்தைக் குறிக்கிறது. அவர்கள் தங்களை “சமநிலை பேணுபவர்கள்” (Reasonable Man) என்றும், “அதிதீவிர பெண்ணியத்தை விமர்சிப்பவர்கள்” என்றும் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இவர்களின் வாதங்கள் நுணுக்கமானவை, ஆனால் ஆபத்தானவை. 1. சட்டத்தைக் கத்தியாகச் சித்தரித்தல் பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட சட்டங்களை, “இப்போது பெண்கள் தற்காப்புக் கேடயமாகப் பயன்படுத்தாமல், ஆண்களைப் பழிவாங்கும் கத்தியாக (Sword) மாற்றுகிறார்கள்” என்று இவர்கள் வாதிடுகிறார்கள். உண்மை நிலை: இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் புகாரளிக்கப்படுவதே மிகக் குறைவு. அப்படி இருக்கையில், ஒரு சில விதிவிலக்குகளை முன்னிறுத்தி, ஒட்டுமொத்தப் பாதுகாப்புச் சட்டங்களையுமே ஆண்களுக்கு எதிரான அச்சுறுத்தலாகச் சித்தரிப்பது, வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதி தேடி வருவதைத் தடுக்கும் ஒரு சூழ்ச்சியாகும். 2. ஆதாரமற்ற ‘ஆய்வு’த் தரவுகள் விவாதங்களின் போது, “புள்ளிவிவரங்கள் சொல்கின்றன”, “ஆய்வுகள் காட்டுகின்றன” என்று மேலோட்டமாகப் பேசுவதன் மூலம் ஒரு போலியான நம்பகத்தன்மையை உருவாக்குகிறார்கள். எந்த ஆய்வு, யார் நடத்தியது என்ற ஆதாரங்கள் இன்றி, வெறுமனே வார்த்தை ஜாலங்களால் தங்களை ஒரு நடுநிலையாளராகக் காட்டிக்கொள்கிறார்கள். இது பெண்ணுரிமைக்காகப் போராடுபவர்களை ‘உணர்ச்சிவசப்படுபவர்கள்’ என்று முத்திரை குத்தப் பயன்படுகிறது. 3. ‘பாதிக்கப்பட்ட ஆண்’ எனும் புதிய அரசியல் (Politics of Male Grievance) பழைய காலத்து ஆணாதிக்கம் அதிகாரத்தைச் செலுத்தியது. ஆனால் இந்த நவீன ஆணாதிக்கம், “ஆண்கள் இப்போது கடும் நெருக்கடியில் இருக்கிறார்கள், அவர்கள் ஒருவித அச்சத்தில் வாழ்கிறார்கள்” என்று ஆண்களைப் ‘பாதிக்கப்பட்டவர்களாக’ (Victims) சித்தரிக்கிறது. ராகுல் ஈஸ்வர் போன்றவர்களின் பேச்சுக்கு ஆதரவு கிடைப்பதற்குக் காரணம் அவர்களின் ‘பக்தி கலந்த மென்மையான’ அணுகுமுறைதான். பெண்களின் சமத்துவக் குரல் ஓங்கும்போது, அதுவரை தங்களுக்கு இருந்த முன்னுரிமைகளை இழக்க விரும்பா ஆண்கள், இந்த ‘மென்மையான ஆணாதிக்கத்தை’ ஒரு பாதுகாப்பாகக் கருதுகிறார்கள். 4. இதன் நீண்டகால விளைவு பெண்களின் விமர்சனங்களை ‘மிகைப்படுத்தப்பட்டது’ என்றும், சட்டப் பாதுகாப்புகளை ‘வரம்பு மீறல்’ என்றும் தொடர்ந்து பரப்புவதன் மூலம், உண்மையில் பாதிக்கப்படும் பெண்கள் நீதி தேடி வருவதற்கான சூழல் சிதைக்கப்படுகிறது. சமூகம் மாறும்போது ஏற்படும் அசௌகரியங்களை ‘அநீதி’ என்று அழைக்க முடியாது. அதிகாரத்தை விட்டுக்கொடுக்க மனமில்லாத ஒரு வர்க்கம், தனது ஆதிக்கத்தைத் தற்காத்துக் கொள்ளத் தேடும் ஒரு நவீன மொழிதான் இந்த ‘மென்மையான ஆணாதிக்கம்’. தமிழில் சுருக்கம் : ராஜு பாய் ஆதாரம்: தி வயர் (The Wire), பிப்ரவரி 27, 2026</p>
