பேரம் பேசும் மாட்டு வியாபாரிகளிடம் ரசீது கேட்கும் பறக்கும் படை அதிகாரிகள்!
20 Mar 2026, 2:55 pm
<p><strong>பேரம் பேசும் மாட்டு வியாபாரிகளிடம் ரசீது கேட்கும் பறக்கும் படை அதிகாரிகள்!</strong></p>
<p>நாமக்கல், மார்ச் 20- மாட்டு சந்தையில் பேரம் பேசி மாடுகளை வாங்கும் வியாபாரிகளிடம், கொண்டு செல்லும் பணத்திற்கான ரசீது இல்லையென்றால், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்வதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் ஏப்.23 ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்வதற்காக பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, சாலைகளில் செல்லும் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள தோப்புக்காடு பகுதியில், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாகனத் தணிக்கை பறக்கும் படை சி பிரிவினர் வியாழனன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு சரக்கு ஆட்டோகளை மறித்து சோதனை செய்தனர். முதல் ஆட்டோவில் பயணம் செய்த சேலத்தை சேர்ந்த கண்ணையன் என்பவரிடம் சோதனை செய்த பொழுது, ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல், 2 ஆவது ஆட்டோவை சோதனை செய்த பொழுது, அதில் பயணம் செய்த சேலத்தை சார்ந்த ரமேஷ் என்பவர் கொண்டு வந்த ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், 2 பேரும் ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தில் நடைபெறும் வாராந்திர மாட்டுச்சந்தை வியாபாரத்திற்கு வந்ததாகவும், பறிமுதல் செய்யப்பட்டது மாடு விற்பனை செய்த பணம் எனவும் தெரியவந்தது. ஆனால், அதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால், உரிய ஆவணங்களை காட்டி பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட பணம், தேர்தல் அலுவலரும், வட்டாட்சியருமான பிரகாசிடம் ஒப்படைக்கப்பட்டது. பல்லாண்டு காலங்களாகவே வாய் வார்த்தையால் பேரம் பேசி நடைபெற்று வரும் மாட்டுச்சந்தை வியாபாரத்தில், ரசீது ஆவணங்கள் வேண்டுமென தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கேட்கின்றனர். திடீரென கேட்டால் அதை (ஆவணங்களை) தயார் செய்வது எப்படி என மாட்டுச்சந்தை வியாபாரிகள் குழப்பத்திலும், கவலையிலும் ஆழ்ந்துள்ளனர்.</p>
