வாரிய அலுவலகம் முன்பு மின் ஊழியர்கள் தர்ணா
18 Feb 2026, 3:04 pm
<p><strong>வாரிய அலுவலகம் முன்பு மின் ஊழியர்கள் தர்ணா</strong></p>
<p>சென்னை, பிப். 18 - ஊதிய உயர்வை விரைந்து வழங்கக் கோரி, தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பினர் (சிஐடியு) புதன்கிழமையன்று மின்வாரியத் தலைமை அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். மின் ஊழியர்களுக்கு 1.12.2023 முதல் புதிய ஊதிய ஒப்பந்தம் அமலுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், 26 மாதங்களை கடந்தும் ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்படாமல் உள்ளது. தொழிற்சங்கங்களுடன் வாரியம் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தி, வரைவு அறிக்கையை அரசு அனுப்பி உள்ளது. ஆனால், நிதித்துறை ஒப்புதல் அளிக்காமல் உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் மின் ஊழியர் மத்திய அமைப்பினர் தலைமை அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். ஊதிய உயர்வை 26 மாதங்களாக காலதாமதம் செய்வதை கண்டித்தும், நிதித்துறை விரைந்து ஒப்புதல் வழங்கக்கோரியும் முழக்கமிட்டனர். “தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் ஊதிய உயர்வு மேலும் காலதாமதம் ஏற்படும். எனவே, நிதித்துறை உடனடியாக வாரியத்தின் வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் தர வேண்டும். ஓரிரு தினங்களுக்குள் ஒப்புதல் தராவிடில் அடுத்தகட்டப் போராட்டத்திற்கு செல்வோம்” என்று அமைப்பின் பொதுச்செயலாளர் தி. ஜெய்சங்கர் கூறினார். இந்தப் போராட்டத்தில் அமைப்பின் தலைவர் எஸ். கண்ணன், பொருளாளர் வெங்கடேசன், துணைப் பொதுச்செயலாளர் ரவிக்குமார், காஞ்சி மண்டலச் செயலாளர் ஏ. முருகானந்தம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
