துயரத்தைத் துணையாக்கி... - பெரணமல்லூர் சேகரன்
24 May 2026, 12:02 am
<p><strong>துயரத்தைத் துணையாக்கி... - பெரணமல்லூர் சேகரன்</strong></p><p>ஒரு சலவைக்காரர் நான்கைந்து கழுதைகளை வைத்துக்கொண்டு தனது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார். அந்தக் கழுதைகளும் அவர் சொல்வதைப் பிசகின்றி செய்து வந்தன. </p><p>நிறைய பொதிகளைச் சுமந்து அவருக்கு உதவி செய்தன. ஒரு நாள் அவரது கழுதைகளுள் ஒன்று அந்த ஊரின் பாழுங்கிணற்றில் தவறி விழுந்து விட்டது. </p><p>அதிலிருந்து மீள்வதற்கு அது எவ்வளவோ முயற்சித்தது. முடியவில்லை.</p><p> தனது கழுதை கிணற்றில் விழுந்து விட்டதை அறிந்த சலவைக்காரர் அங்கு போய் பல விதத்தில் முயற்சி செய்து அந்தக் கழுதையை வெளியேற்றப் பாடுபட்டார். ஆனாலும் முடியவில்லை. </p><p>என்ன செய்வது என்று அவர் சோகத்துடனும் வருத்தத்துடனும் இருந்தபோது அவ்வூரைச் சேர்ந்த சிலர் அங்கு வந்து சேர்ந்தனர். </p><p>அவர்களிடம் தனது கழுதையை மீட்க உதவுமாறு அவர் வேண்டிக் கொண்டார்.</p><p> அதைக் கேட்டு அவர்கள் நக்கலுடன் சிரித்தனர். “போயும் போயும் கழுதைக்காக வருத்தப்படு கிறாயே, வெறும் அழுக்குப் பொதியை சுமந்து செல்வது தானே இது! மேலும் யாரைக் கண்டாலும் பின்னங் காலால் உதைக்க வேறு செய்யும். </p><p>இப்படிப்பட்ட கழுதை உயிருடன் இருந்தால் என்ன இந்த கிணற்றிலே செத்து மடிந்தால் தான் என்ன? பைத்தியக்காரனான நீ இதை உயிருடன் மீட்க ஆசைப்படுகிறாய்” என்று சலவைக்காரை இகழ்ந்து பேசினர். </p><p> அத்துடன் ஒன்று விடாமல் அங்கிருந்த கற்கள் புழுதி மண் மரக்கழிவுகளை அந்தக் கிணற்றுக்குள் ஏளனம் பேசியபடியே வாரி இறைத்தனர். </p><p>கிணற்றுக்குள் இருந்த கழுதையோ, அந்தக் கற்கள் மண்களை எல்லாம் கிணற்றிலிருந்து, தான் மீள்வதற்கான வசதி வாய்ப்பாகவே கருதியது. </p><p>சற்று நேரத்தில் அந்தப் பாழும் கிணறு இவற்றால் மூடிவிடவே அந்தக் கழுதை அதிலிருந்து வெளியே வந்து உயிர் பிழைத்தது. </p><p>ஊர் மக்களின் தூற்றலையும் கேலி கிண்டலையும் எண்ணி வருந்தி அவர்களால் வீசி எறியப்பட்ட மண் மற்றும் கற்களின் மூடல்களில் அந்தக் கழுதை அமிழ்ந்து போயிருந்தால் அது செத்துப் போய் இருக்கும். ஆனால் அது அவ்வாறு செய்யவில்லை</p><p>. புத்திசாலித்தனமாக அவற்றைப் பயன்படுத்தியது. கிணற்றிலிருந்து தப்பித்து வெளியே வந்தது. உயிர் பிழைத்தது. </p><p> நம் வாழ்விலும் இப்படிப்பட்ட சம்பவங்கள் நேரும்போது அதனால் வருத்தம் பெற்று அயர்ந்து போய்விடாமல் அதனையே வெற்றிக்கான வாய்ப்பாகக் கருதிப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் எதனையும் சாதிக்க முடியும் வெற்றியை பெற முடியும்.</p>
