திருச்சி விரைவு செய்திகள்
23 Feb 2026, 5:35 pm
<p><strong>பிப்.26 தஞ்சாவூரில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்</strong></p>
<p>தஞ்சாவூர், பிப்.23- தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், பிப்.26 (வியாழக்கிழமை) அன்று முற்பகல் 10 மணிக்கு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், கீழ்தளத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு புதிய தொழில் நுட்பங்கள் குறித்து, திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன. மேலும், இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவு, நீர்ப்பாசனம், கால்நடை, மின்சாரம் போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துக்களைத் தெரிவிக்கலாம். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கருத்துக்களை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை, அன்றைய தினம் காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். விவசாயிகள் தாங்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை, கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று, பின்னர் மனுக்களை அளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p><strong>புகையிலை விற்பனை: ஒருவர் கைது</strong></p>
<p>தென்காசி,பிப்.23- தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற பெண் கைது செய்யப் பட்டார். கடையத்தை அடுத்த சங்கராலிங்கபுரத்தை சேர்ந்த ராஜ்குமாரின் மனைவி கிருஷ்ணம்மாள் (36). இவர் இப்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருவது குறித்து கடையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கடையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாடசாமி இதுகுறித்து ரகசியமாக விசாரித்து தகவலை உறுதி செய்து அதிரடியாக கிருஷ்ணம்மாளை கைது செய்து வழக்கு பதிவு செய்தார். அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட 18 கிலோ புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட கிருஷ்ணம்மாள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பின்னர் கொக்கிரகுளம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.</p>
<p><strong>சிசிடிவி கேமிராக்கள் பொருத்தம்</strong></p>
<p>நாகர்கோவில்,பிப்.23- கன்னியாகுமரி மாவட்ட ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டன. குமரி மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் சிசிடிவி என்ற இலக்குடன் செயல்படும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ,ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 1616 கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.</p>
<p><strong>சிபிஎம் போராட்டம் வெற்றி: மாற்றுப் பாதை அமைக்க மாவட்ட ஆட்சியர் உறுதி</strong></p>
<p>அரியலூர், பிப்.23- பொதுப் பாதை கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டம் வெற்றிபெற்றது. மாற்று பாதை அமைத்துத் தர மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரத்தில் வசிக்கும் 70-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு, அரியலூர் நகராட்சி பின்புறம் வீட்டுமனைகள் உள்ளன. இந்த மனைகளுக்குச் செல்லக் கூடிய பொதுப் பாதையை, வருவாய்த்துறை சார்பில் தவறுதலாக ஏ.ஆர். போலீஸிடம் ஒப்படைத்து விட்டனர். இடத்தின் உரிமையாளர்கள் அந்த இடத்தில் வீடு கட்ட முடியாமல் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர். இந்த கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு பொதுமக்கள் கொண்டுவந்தனர். அந்த இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடம் உள்ளது. தங்கள் பாதையை மீட்டெடுப்பதற்காக கடந்த ஐந்தாண்டு காலமாக நமது கட்சியின் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னத்துரை, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி ஆகியோரை வரவழைத்து பல கட்ட போராட்டம் நடத்தியும், மாவட்ட நிர்வாகம் பாதை வழங்குவதற்கு தயாராக இல்லை. ஆகவே கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தலைமையில் 3.8.2025 அன்று பாதை மீட்பு போராட்டம் நடத்த திட்டமிட்டு ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி போராட்டத்தை முன்னெடுத்தும், போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் பாதையை வழங்கும்வரை கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என முடிவெடுத்து, மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் நாள் முழுவதும் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இறுதியாக, மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி நடத்திய பேச்சுவார்த்தை முடிவில் மூன்று மாத காலத்திற்குள் பாதையை வழங்குவதற்கு ஏற்பாடு செய்கிறோம் என மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் முன்னிலையில் முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மூன்று மாதம் முடிந்தும், பாதை வழங்க மாவட்ட ஆட்சியர் காலதாமதப் படுத்தியதால், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அடங்கிய குழு மாவட்ட ஆட்சியரை சந்தித்து, தாங்கள் சொன்ன அடிப்படையிவ் நான்கு மாதம் முடிந்து விட்டது. பாதை குறித்துப் பேசியபோது, மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், அரியலூர் கோட்டாட்சியர், அரியலூர் வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கொண்ட கூட்டத்தில், “நீங்கள் கேட்கும் பாதை வழங்க வாய்ப்பு இல்லை என்றும், ஆகவே மாற்றுப் பாதை தருவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்’’ என்றும் மாவட்ட ஆட்சியர் கூறியதன் அடிப்படையில் பாதை வேண்டும் என்ற நோக்கத்தில் அதை ஏற்றுக் கொண்டோம். அத்தோடு மாவட்ட ஆட்சியரே நகராட்சி ஒப்புதலைப் பெற்று ரெக்கார்டாக பாதை வசதியை விரிவுபடுத்தித் தருவதாக ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், அரியலூர் நகராட்சி அருகில் உள்ள உழவர் சந்தை வழியாகச் செல்லும் சாலையை தேர்வு செய்தனர். அதை ஏற்றுக் கொண்டோம். தொடர்ந்து நடத்திய போராட்டத்தின் விளைவாக, பாதை வழங்குவது என மாவட்ட நிர்வாகம் ஒப்புக்கொண்டது. இது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும்.</p>
