‘தர்ம சாஸ்த்ரச் சுருக்கம்’ நூல்
6 Jun 2026, 8:33 pm
<p><strong>‘தர்ம சாஸ்த்ரச் சுருக்கம்’ நூல்</strong></p><p>இஃது தஞ்சாவூர் ஜில்லா பாபனாசம் தாலூகா கீழவிடையல் கிராமம் இராமஸ்வாமிஅய்யர் குமாரர் பென்ஷன்டு ரிவினியூ இன்ஸ்பெக்டர் ஆர். முத்துஸாமி அய்யரால் இயற்றப்பட்டது. </p><p>இந்த நூல் ரிஷிகள் முனிகள் பெயரிலுள்ள தர்ம சாஸ்திர நூல்களில் உள்ளவற்றையும் ஸ்மிருதி முக்தாபலமெனும் வைத்யநாத தீக்ஷிதீயத்தை அனுசரித்தும் எழுதப்பட்ட நூலாகும். </p><p>இதில் ஆன்ஹிக காண்டத்தில் “சாப்பிடக்கூடாத விஷயங்கள்” எனும் தலைப்பில் பலவிதமான மூடநம்பிக்கை விசயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மக்களின் ஆள் மனதில் பதித்த கொடுமையான மூட நம்பிக்கைகள் அனைத்தும் சனாதன நூல்களான தர்ம சாஸ்திர நூல்களிலிருந்து பெறப்பட்டவை என்பதில் சந்தேஹமில்லை.</p><p>குறிப்பாக ரிஷிகள் பெயர்களிலுள்ற தர்ம சாஸ்திர நூல்களில் உள்ளவற்றை பிராமணர்கள் இன்றும் பின்பற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. மேலுள்ள தலைப்பில் உள்ள ஒருசில மூட நம்பிக்கை விசயங்களை மட்டும் எழுதுகிறேன், 8 சாப்பிடக்கூடாத விஷயங்கள்: பல்லினால் கடித்து கீழே வைக்கப்பட்டதும், வாயில்போன அன்னத்தின் மிச்சமும் உச்சிஷ்டமெனப்படுவதால் மறுபடி அவைகளை புஜிக்கக்கூடாது. </p><p>கையில் அன்னத்தை வைத்துக்கொண்டு புஜிப்பதும், சப்தத்துடன் சாப்பிடுவதும், விரல்களை விரித்துக் கொண்டு சாப்பிடுவதும் கோமாம்ஸபக்ஷணத்திற்கு ஸமானமாகும். ஈர வஸ்த்ரத்துடன் புஜிக்கக் கூடாது. ஒற்றை வேஷ்டியுடன் புஜிக்கக்கூடாது.</p><p>தெருக்கதவைச் சாற்றாமலும், சந்த்ரிகையின்(நிலா) வெளிச்சத்திலும், கொள்ளிக்கட்டையின் வெளிச்சத்திலும், ப்ரதோஷகாலத்திலும், நிசியிலும், மாடியிலும், புஜிக்கச்கூடாது. இலையில் ஒன்றும் மீதியின்றி புஜிக்கக்கூடாது.தன்பெண்சாதி பார்த்துக்கொண்டிருக்க புஜிக்கக் கூடாது.</p><p>அப்படிப் புஜித்தால் வீர்யமில்லாத பிள்ளை பிறக்கும். ஸ்த்ரீகளுடன் புஜிக்கக் கூடாது.தாய், ஸஹோதிரி, பத்னி, மற்ற எந்த ஸ்த்ரீகளுடனும் புஜிக்கக் கூடாது. </p><p>பத்னியானவள் சாப்பிடும்போதும், கொட்டுவாய் விடும்போதும், சரீரஸுகத்திற்கு ஏற்றவாறு உட்கார்ந்திருக்கும்போதும் அவளைப் பார்க்கலாகாது. எக்காளம், இயந்திரம், வண்டி, உரல், செக்கு, ஆலை, சூத்ரன், இவைகளின் சப்தம் கேட்கும்போது புஜிக்கலாகாது.</p>
