திருச்சி விரைவு செய்திகள்
17 Feb 2026, 3:36 pm
<p><strong>இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வலியுறுத்தல்</strong></p>
<p>திருச்சிராப்பள்ளி, பிப்.17- தமிழர் தேசம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக அகதிகளாக தங்கி மறுவாழ்வு முகாம்களில் வாழ்ந்து வரும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழுவில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன், பொதுச் செயலாளர் தளவாய் ராஜேஷ், மாநில இணை பொதுச் செயலாளர் கள்ளிக்குடி எம். ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
<p><strong>14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் இன்று கடையடைப்பு போராட்டம்</strong></p>
<p>திருச்சிராப்பள்ளி, பிப்.17- சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 23 ஆண்டுகளாக பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களை பணிவரன் முறைப்படுத்த வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது வரம்பை 58-இல் இருந்து 60 ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்.18 அன்று டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. சிஐடியு, ஏஐடியுசி பணியாளர் சங்கம், சேல்ஸ்மேன்கள் சங்கம் உட்பட அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சென்னையில் கூடி எடுத்த முடிவின்படி, 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்’’ என அதில் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p><strong>தஞ்சாவூர்: 9 வட்டார ஒருங்கிணைப்பாளர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்</strong></p>
<p>தஞ்சாவூர், பிப்.17- தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 6 ஒன்றியங்களில் காலியாக உள்ள 9 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (BC) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை (காலிப்பணியிடம் எண்ணிக்கை தலா-1), மதுக்கூர் (காலிப்பணியிடம் - 2), பேராவூரணி (காலிப்பணியிடம் - 3) ஆக கூடுதல் 9 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (BC) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வித்தகுதி - ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் குறைந்தது 3 மாத MS Office கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது கணினி அறிவியல் (Computer Science)/கணினி பயன்பாட்டுகள் (Computer Applications) துறையில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். வயது 35- வயதிற்குள் இருக்க வேண்டும். SHG / PLF-இல் குறைந்தது 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் சம்மந்தப்பட்ட வட்டாரத்தை இருப்பிடமாக கொண்டிருக்க வேண்டும். இருசக்கர வாகன ஒட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். நன்னடத்தை சான்று சமர்ப்பிக்க வேண்டும். முன்னர், தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம், புதுவாழ்வு திட்டம், தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார சங்கம், அல்லது பிற மாநில அரசு திட்டங்கள், திட்டங்களில் நிர்வாக அல்லது நிதி முறைகேடுகள் உள்ளிட்ட காரணங்களால் பணி நீக்கம், நீக்கம் செய்யப்பட்டவராக இருக்கக்கூடாது. வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (BC) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பிப்.19-க்குள் இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, எண்-223: இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், தஞ்சாவூர் என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும். மேலும் விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை மற்றும் இருப்பிட சான்று இணைத்து அனுப்பிட வேண்டும். மேற்குறிப்பிட்ட ஒப்பந்த அடிப்ப டையிலான காலிப்பணியிடங்களுக்கு மாவட்ட தேர்வுக்குழு வாயிலாக நேர்முக தேர்வு நடத்தப்படும். உரிய காலத்திற்குள் வரப்பெறாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.</p>
<p><strong>தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு சொற்பொழிவு</strong></p>
<p>தஞ்சாவூர், பிப்.17- தமிழ்ப் பல்கலைக்கழகம் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளியில் பேரா. செ.வை. சண்முகனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு திங்கட்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் குழு உறுப்பினர் முனைவர் மரு.பெ. பாரதஜோதி தலைமை வகித்தார். பதிவாளர் (பொ) கோ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இதில், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் ச. தங்கமணி “பேராசிரியர் செ.வை. சண்முகனாரின் நோக்குக் கோட்பாடு” எனும் பொருண்மையில் உரையாற்றினார். அதில், தொல்காப்பிய இலக்கண உறுப்புகள் குறித்தும், அவற்றுள் மாட்டு, பொருள்கோள், நோக்கு, மெய்ப்பாடு இவற்றின் அடிப்படையில் நவீன சிறுகதை, கவிதை இவற்றை அணுகும் முறைகள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார். முன்னதாக, இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளியின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ச.கவிதா வரவேற்றார். இணைப் பேராசிரியர் முனைவர் இரா. வெங்கடேசன் நன்றி கூறினார். முனைவர் பட்ட ஆய்வாளர் து. தர்ஷினி இணைப்புரை வழங்கினார்.</p>
<p><strong>ஆட்சியரகத்தில் தற்கொலைக்கு முயன்ற கார் ஓட்டுநர் கைது</strong></p>
<p>தஞ்சாவூர், பிப்.17- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கட்கிழமை தற்கொலைக்கு முயன்ற கார் ஓட்டுநரைக் காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் அருகே, தளவாய்ப்பாளையம் புஷ்பம் நகரைச் சேர்ந்தவர் எஸ். வெங்கடேஷ்(49). கார் ஓட்டுநரான இவர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்கட்கிழமை ஆட்சியரின் வாகன நிறுத்துமிடம் முன் திடீரென கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணெய்யை ஊற்றிக் கொண்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் உடனடியாக அவரை மீட்டு விசாரணை செய்தனர். இதில், புளியந்தோப்பு டாஸ்மாக் மதுக்கடை அருகே பிப்.13 ஆம் தேதி இரவு வெங்கடேஷ் சிலருடன் சேர்ந்து மதுபானம் அருந்தினாராம். அப்போது, ரோந்து சென்ற தாலுகா காவல் நிலையத்தினர் பொது இடத்தில் மது அருந்தக் கூடாது என்றும், அனைவரும் எழுந்து செல்லுமாறும் கூறினர். அதற்கு காவல் துறையினரிடம் வெங்கடேஷ் வாக்குவாதம் செய்ததுடன், அவர்களைத் திட்டி மிரட்டி, பணி செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து வெங்கடேஷை தேடி வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெங்கடேஷ் மாவட்ட ஆட்சியரகத்தில் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து, வெங்கடேஷை காவல் துறையினர் கைது செய்தனர்.</p>
<p><strong>குமரி மாவட்ட தலைமை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்</strong></p>
<p>நாகர்கோவில், பிப்.17- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தலைமை நீதிமன்றத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மெயில் மூலமாக மாவட்ட நீதிமன்றத்திற்கு மர்ம நபரால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் மூன்று குழுக்களாக சோதனை மேற்கொண்டனர். இதனால் நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்கள், வழக்கு சம்பந்தமாக வந்த பொதுமக்கள் நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.</p>
<p><strong>நெல் கொள்முதல் பணிகளில் பதிவு செய்த லாரிகளுக்கு மட்டும் அனுமதி வழங்க கோரிக்கை</strong></p>
<p>தஞ்சாவூர், பிப்.17- நெல் கொள்முதல் நிலையங்கள், சேமிப்பு கிடங்குகளில் நெல் மூட்டைகளை ஏற்றி, இறக்க பதிவு செய்த லாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என தஞ்சாவூர் டாரஸ் லாரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திங்கள்கிழமை தஞ்சாவூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் எம்.சுந்தரவேல் தலைமை வகித்தார். செயலாளர் பிரகாஷ், பொருளாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், திருவையாறு, கந்தர்வக்கோட்டை லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லாரிகள் பதிவு புதுப்பித்தலுக்கான உரிமக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு மனு கொடுப்பது. தஞ்சாவூரில் கொள்முதல் நிலையத்திலும், சேமிப்பு கிடங்குகளிலும் நெல் மூட்டைகளை ஏற்றி இறக்க, லாரிகள் வழங்கும் ஒப்பந்ததாரர் சங்கத்தில் பதிவு செய்த வாகனங்களுக்கு மட்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.</p>
