எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஜூன் 4-இல் ஆர்ப்பாட்டம்: சிபிஐ அறிவிப்பு
2 Jun 2026, 4:05 pm
<p>எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 4-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.</p><p>இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் ராணுவ ரீதியிலான தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருவதால், மேற்காசிய நாடுகளில் பதற்றம் நிலவுகிறது.</p><p>ஹார்முஸ் நீரிணை வழியாகச் சரக்குக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, எரிபொருள் தட்டுப்பாடு பல நாடுகளில் ஏற்பட்டுள்ளது.</p><p>இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டு வருகின்றன.</p><p>குறிப்பாகச் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதால் கடந்த சில மாதங்களாக உணவகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன.</p><p>தற்போது சென்னையில் 19 கிலோ எடை கொண்ட, வணிக நிறுவனங்களின் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.46 உயர்த்தப்பட்டு, ரூபாய் 3,283-க்கு விற்கப்படுகிறது.</p><p>இதனால் உணவகங்கள், வணிக நிறுவனங்கள் மேலும் மேலும் மூடப்பட்டு வருகின்றன. ஒரு கோப்பை டீயின் விலை 50 விழுக்காட்டிற்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் உணவுப் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளன.</p><p>இந்த நெருக்கடிக்கும், விலை உயர்வுக்கும் ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே காரணமாகும். மேலும் தனியார் எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்குச் சாதகமான எண்ணெய் விலை நிர்ணயக் கொள்கையும், அதிகப்படியான அரசாங்க வரிகளுமே காரணமாகும்.</p><p>இந்த விலை உயர்வுக்கு ஒன்றிய பாஜக அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.</p><p>பெட்ரோல், டீசல் மற்றும் வணிக நிறுவனங்களின் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.</p><p>இக்கோரிக்கையை வலியுறுத்தியும், ஒன்றிய பாஜக அரசின் தவறான கொள்கையைக் கண்டித்தும் வரும் 04.06.2026 வியாழன் அன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
