மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்
6 hours before
<p>செங்கல்பட்டு மாவட்டம் காலவாக்கம் பகுதியில் நடைபெற்ற மதிமுக நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் அவரை அநாகரீகமான முறையில் வெளியேற்றிய சம்பவத்திற்கு கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.</p><p>"செய்தியாளர்களின் வாயை அடைக்க முயன்றால் உண்மைகள் மறைந்துவிடுமா?" என்று கேள்வி எழுப்பியுள்ள கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம், இதற்கு வைகோ தார்மீக அடிப்படையில் வருத்தம் தெரிவிப்பதே பொருத்தமான நடவடிக்கையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.</p><p>இது குறித்து கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:</p><p>"செய்தியாளர்களின் வாயை அடைக்க முயன்றால் உண்மைகள் மறைந்துவிடுமா? செய்தியாளர் சந்திப்பில் இருந்து செய்தியாளரை வெளியேற்றிய வைகோவின் செயலுக்கு கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்</p><p>செங்கல்பட்டில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நடந்துகொண்டுள்ள விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தினகரன் நாளிதழ் செய்தியாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பாவிட்டால், வைகோ, வேறு செய்தியாளர்களின் கேள்விக்கு திரும்பியிருக்கலாம்.</p><p>ஆனால் தனது அரசியல் வன்மத்தை, செய்தியாளர்கள் மீது வீசும் வகையில், அவரை வெளியேறச் சொல்லி மிரட்டியதும், தனது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு, மிகவும் அநாகரீகமான முறையில், வன்முறையை பிரயோகித்து அவரை வெளியேற்றி இருப்பது அப்பட்டமான ஜனநாயக மீறல்.</p><p>அவரது பாணிலேயே சொல்வதானால், “Mr.Vaiko, its utterly undemocratic and unethical and a disgrace to your political experience.” ஒரு மூத்த அரசியல்வாதியான வைகோ, இன்று நடந்துகொண்டிருக்கும் விதம் ஒரு போதும் ஏற்புடையது அல்ல. அவர் இதற்கு தார்மீக ரீதியில் வருத்தம் தெரிவிப்பதே சரியாக இருக்கும் என கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கருதுகிறது.</p><p>இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தவிர்க்கும் வகையில், தனது நிதானத்தை இழக்காமல் வைகோ இனி வரும் நிகழ்வுகளில் நடந்து கொள்ள வேண்டும் என கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் சுட்டிக்காட்ட விரும்புகிறது. நேர்ந்துள்ள அப்பட்டமான செய்தித்துறை மீதான இந்த அடக்குமுறையையும், அவமதிப்பையும் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><br></p>
