மாணவர்கள் மீது தாக்குதல்: கோவையில் இந்திய வழக்கறிஞர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
21 Jul 2026, 2:39 pm
<p>தில்லியில் மாணவர்கள், இளைஞர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலை கண்டித்து கோவை நீதிமன்ற வளாகத்தில் அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>நீட் உள்ளிட்ட தேர்வுகளில் நடந்த முறைகேடு மற்றும் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைமையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை கண்டித்து கோவை நீதிமன்ற வளாகத்தில் அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இந்த போராட்டத்தில், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜோதிகுமார், மாநிலப் பொருளாளர் மாசேதூங், மாநிலக் குழு உறுப்பினர் கோபால்சங்கர், நிர்வாகிகள் கரீம், விஜய் வெண்மணி, சா.பாலமுருகன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.</p><p>இது குறித்து பேசிய அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜோதிகுமார் கூறும் போது : கடந்த 22 நாட்களாக இந்தியா முழுவதும் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் தொடர் போராட்டங்களிலும், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்பதே மாணவர்களின் முதன்மையான கோரிக்கையாகும். நேற்று தில்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் ஜனநாயகப் பூர்வமாகவும், அமைதியான முறையிலும் கவன ஈர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தினார்கள். ஆனால், இந்திய மாணவர்களின் கனவுகளைச் சிதைக்கும் ஒன்றிய அரசு, இந்தப் பேரணியைக் கொடூரமான அடக்குமுறையைக் கொண்டு ஒடுக்கியுள்ளது. அமைதியாகப் பேரணி சென்ற மாணவர்கள் மீது தடி தாக்குதல் நடத்தப்பட்டு, 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட வழக்கறிஞர்களும் பல்வேறு அமைப்பினரும் மாணவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த அடிப்படையில், டெல்லியில் நடைபெற்ற தாக்குதலைக் கண்டித்து இன்று கோவையில் வழக்கறிஞர்கள் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.</p><p>மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கேட்டு, நீட் முறைகேடுகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். தில்லியில் தாக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாகத் தமிழக முதலமைச்சரும், தமிழக அரசும் வன்முறையைக் கண்டித்துக் குரல் கொடுக்க வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் ஒரு வலுவான குரலையும் தீர்மானத்தையும் பதிவு செய்ய வேண்டும் என்றார்.</p><p><br></p>
