தடைகளைத் தாண்டி மீண்டும் தடத்தில்! சி.ஸ்ரீராமுலு
28 Jun 2026, 10:19 pm
<p><strong>தடைகளைத் தாண்டி மீண்டும் தடத்தில்! சி.ஸ்ரீராமுலு </strong></p><p> மூன்று ஆண்டுகளில் மூன்று கணுக்கால் அறுவைச் சிகிச்சைகள். “இனி ஓடவே முடியாது” என்ற மருத்துவர்களின் தீர்ப்பு. பல வீரர்களுக்கு இது விளையாட்டு வாழ்க்கையின் முடிவாக இருந்திருக்கும். ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த 400 மீட்டர் ஓட்ட வீரர் பாரத் ஸ்ரீதருக்கு அது ஒரு புதிய தொடக்கமாக மாறியது. விழுப்புரத்தைச் சேர்ந்த ஒரு லாரி ஓட்டுநரின் மகனான பாரத், நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தனது ஓட்டக் கனவை வளர்த்தெடுத்தார். பள்ளிப் போட்டியில் இவரது திறமையைக் கண்டறிந்த பயிற்சியாளர் ஆர்.புகழேந்தி, தனது இல்லத்திலேயே தங்க வைத்துப் பயிற்சி அளித்தார். இதன் பலனாக, 2021 உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலமும், 2022இல் வெள்ளியும் வென்று உலக அரங்கில் தமிழக மின்னலாக ஒளிர்ந்தார். காயத்தின் சவால்களும் தமிழக அரசின் கரமும் வெற்றிகளுக்கு நடுவே, இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2023 முதல் தொடர் அறுவைச் சிகிச்சைகளுக்கு உள்ளானார். தழும்புத் திசுக்கள் உறைந்து போனதால், “அதிக அழுத்தம் கொடுத்தால் தசைநார் கிழியும், இனி தடகளத்தைத் தொடர முடியாது” என மருத்துவர்கள் கைவிட்டனர். நீண்ட காலம் போட்டிகளில் ஆடாததால் அரசு மற்றும் தனியார் நிதியுதவிகளும் நின்றன. அந்த இக்கட்டான சூழலில், முன்னணி நீளம் தாண்டுதல் வீரர் முரளி ஸ்ரீசங்கரின் பரிந்துரையால் கத்தாரில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்குச் செல்ல வழிவகை பிறந்தது. ஏழைக் குடும்பமான இவர்களின் கத்தார் சிகிச்சைச் செலவை ஏற்கும் வகையில், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ‘மிஷன் இன்டர்நேஷனல் மெடல்ஸ்’ திட்டம் உதவிக்கரம் நீட்டியது. அங்கு நடந்த மூன்றாவது அறுவைச் சிகிச்சையும், பயிற்சியாளர் ராஜ்மோகனின் தொடர் ஆதரவும் பாரத்தை மீண்டும் தடகளப் பாதைக்கு மீட்டெடுத்தன. மீண்டெழுந்த நாயகன் இன்றைய சீசனில் மீண்டும் தடத்தில் கால்பதித்த பாரத் ஸ்ரீதர், 46.43 வினாடிகளில் இலக்கை எட்டி தனது தனிப்பட்ட சிறந்த நேரத்தைப் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் ஆசிய ரிலே சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார். காயம், நிதி நெருக்கடி என எண்ணற்ற தடைகளைக் கடந்து, ஒலிம்பிக் மற்றும் உலக தடகளப் போட்டிகளில் தங்கப் பதக்கக் கனவோடு ஓடிக்கொண்டிருக்கும் பாரத்தின் கதை, விடாமுயற்சியின் உயிர்த்துடிக்கும் சான்றாகும்.</p>
