ஜனநாயகப் போராட்டத் தலைவர்களை அராஜகமாகக் கைது செய்வதா? வாலிபர் சங்கம் கண்டனம்
19 Nov 2025, 3:33 pm
<p><strong>ஜனநாயகப் போராட்டத் தலைவர்களை அராஜகமாகக் கைது செய்வதா? வாலிபர் சங்கம் கண்டனம்</strong></p>
<p>சென்னை, நவ. 19- தமிழ்நாட்டு மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்திப் போராடும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர்களையும் தொழிற்சங்கத் தலைவர்களையும் சட்டத்திற்குப் புறம்பாகக் கைது செய்யும் தமிழ்நாடு காவல்துறையின் நடவடிக்கைக்கு வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழுகண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 31.10.2025 அன்று திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் (CITU) நடத்திய ஜனநாயகப் போராட்டத்தின்போது, காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தொழிற்சங்க நிர்வாகியைத் தாக்கியதுடன், சிஐடியு மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல தோழர்கள் காயமடைந்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தலைவர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் இருந்த வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் பா. ஆனந்த் ஆகியோரை 18.11.2025 அதிகாலை 3.30 மணியளவில் அராஜகமான முறையில் உள்ளே புகுந்து கைது செய்ததை வாலிபர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. அதேபோல், 18.11.2025 அன்று புதுக்கோட்டையில் மக்களுக்கு இடையூறாக இருக்கும் தனியார் டாஸ்மாக் பார் கடையை அகற்றக் கோரி நடந்த போராட்டத்தின்போது, திருக்கோகர்ணம் காவல் ஆய்வாளர் அழகுராஜ் பெண்களின் கையைப் பிடித்து இழுத்து கைது செய்ததையும், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் மகாதீர் மற்றும் மாவட்டத் தலைவர் ஜனார்த்தனன் ஆகியோரைத் தனியாக இழுத்துச் சென்று தாக்க முயன்றதையும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், சாம்சங் தொழிலாளர்களைப் பணியிட நீக்கம் செய்ததை எதிர்த்து 17.11.2025 அன்று காஞ்சிபுரத்தில் அமைதியான முறையில் பேரணி சென்ற சங்கத் தலைவர்களையும் அராஜகமாகக் கைது செய்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்தச் சம்பவங்களில் அராஜகமாக நடந்துகொண்ட காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட அனைத்துக் காவல்துறை அதிகாரிகள் மீதும் உரிய விசாரணை மேற்கொண்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாலிபர் சங்க மாநிலத் தலைவர் செல்வராஜ், மாநிலச் செயலாளர் எஸ்.கார்த்திக் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.</p>
