கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் விவகாரம் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
11 Apr 2026, 5:30 am
<p><strong>கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் விவகாரம் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா</strong></p><p>கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வர்மா பணியாற்றியபோது, அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அவர் வீட்டில் இல்லை. எனினும் தீயை அணைக்கச் சென்ற தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் வீட்டில் உள்ள ஒரு அறையில் பல மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம் எரிந்து சாம்பலாகிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.</p><p>இந்த விவகாரம் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து நீதிபதி வர்மா மீதான புகார்களை விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியால் ஒரு குழு அமைக்கப்பட்டது.</p><p>அந்த குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, வர்மாவை பதவி விலகுமாறு அறிவுறுத்தினார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து, அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடிதம் எழுதினார். நீதிபதிகள் விசாரணைச் சட்டம் 1968-இன் கீழ் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது நடவடிக்கை எடுக்கும் நோக்கில், மக்களவை சபாநாயகர் ஓர் பிர்லா குழு அமைத்தார்.</p><p>இந்தக் குழு அறிக்கையை தாக்கல் செய்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அரசு சார்பில் அறிவித்து இருந்தது. இந்நிலையில், திடீரென வியாழக்கிழமை நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், "மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களுக்கு, எனது ராஜினாமாவுக்கான காரணங்களைக் கூறி உங்கள் அலுவலகத்திற்கு நான் கடிதத்தை ஏற்கனவே அனுப்பிவிட்டேன். இருப்பினும், மிகுந்த மனவேதனையுடன் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து உடனடியாக விலகும் வகையில் எனது ராஜினாமாவைச் சமர்ப்பிக்கிறேன். இந்தப் பதவியில் பணியாற்றியதை ஒரு கௌரவமாகக் கருதுகிறேன்" என அதில் கூறப்பட்டுள்ளது.</p>
