அடையாளம் இழந்த அதிமுகவும் பிம்ப அரசியலின் பலவீனங்களும்!
16 Mar 2026, 4:46 pm
<p><strong>அடையாளம் இழந்த அதிமுகவும் பிம்ப அரசியலின் பலவீனங்களும்!</strong></p>
<p>தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி சூடுபிடித்துள்ளது. இதுநாள் வரை நிலவிவந்த இருதுருவ அரசியலை மாற்றியமைக்கப் போவதாகப் புதிய சக்திகள் கிளம்பியுள்ள சூழலில், கள நிலவரம் குறித்துதனியார் தொலைக்காட்சி ஒன்றின் ‘ஓபன் டாக்’ நிகழ்ச்சியில் மூத்த பத்திரிகையாளர்கள் விரிவாக விவாதித்தனர். இதில் பத்திரிகையாளர்கள் சுவாமிநாதன், எஸ்.பி.லட்சுமணன், துக்ளக் ரமேஷ், ரவீந்திரன் துரைசாமி, கோடீஸ்வரன் மற்றும் சபீர் அகமத் ஆகியோர் கலந்துகொண்டு தங்களது கூர்மையான அரசியல் பார்வைகளை முன்வைத்தனர்.</p>
<p><strong>திமுக கூட்டணி முன்னணியில் இருப்பதற்கான காரணங்கள்</strong></p>
<p>தற்போதைய அரசியல் சூழலில் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி மற்ற அணிகளை விடப் பலமாக இருப்பதற்குப் பல காரணங்கள் விவாதத்தில் முன்வைக்க ப்பட்டன: வலிமையான கூட்டணி கட்டமைப்பு: கடந்த 2019 முதல் தொடர்ச்சியாகத் தேர்தல்களில் வெற்றி பெற்று வரும் திமுக, தனது கூட்டணியைச் சிதறாமல் தற்காத்து வருகிறது. தோழமைக் கட்சிகளின் வாக்கு தளத்தை ஒருங்கிணைப்பதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார். மக்களுக்கான நேரடித் திட்டங்கள்: மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை, பேருந்துகளில் இலவசப் பயணம், மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் மற்றும் ‘புதுமைப் பெண்’ போன்ற திட்டங்கள் அடித்தட்டு மக்க ளிடையே திமுகவுக்கான ஆதரவை நிலைநிறுத்தியுள்ளன. இந்த ‘விடியல் பயண’த் திட்டங்கள் பெண்களின் வாக்கு களைத் தக்கவைக்க உதவும் முதன்மைக் காரணியாகப் பார்க்கப்படுகிறது. நிர்வாக ரீதியான பிடி: உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் முன்னிறுத்தப்படுவது இளைஞரணிக்கு ஒரு புதிய புத்துயிரைத் தந்துள்ளது. 75 ஆண்டுப் பாரம்பரியம் கொண்ட அந்த இயக்கம், ‘அறிவுத் திருவிழா’ போன்ற நிகழ்ச்சிகள் மூலம் இளைஞர்களைச் சித்தாந்த ரீதியாக ஈர்க்க முயல்வது மற்ற கட்சிகளுக்குச் சவாலாக உள்ளது.</p>
<p><strong>அதிமுக - பாஜக முரண்பாடுகளின் மூட்டையாக ஒரு கூட்டணி</strong></p>
<p>ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவின் கடிவாளம் யாரிடம் இருக்கிறது என்பதில் நிலவும் குழப்பமே அக்கட்சி யின் முதன்மைப் பலவீனமாக மாறியுள்ளது. அடையாளம் இழந்த அதிமுக: ஒரு காலத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர் எனப் பெரும் ஆளுமைகளால் வழிநடத்தப்பட்ட கட்சி, இன்று தனது ‘பெட்டிச் சாவியை’ தில்லியிடம் ஒப்படைத்து விட்டதாக விமர்சனங்கள் எழுகின்றன. எடப்பாடி பழனிசாமி உட்கட்சிப் பூசல்களையும், நீதிமன்ற வழக்குகளையும் கையாள்வதிலேயே தனது முழு ஆற்றலையும் செலவிடுகிறாரே தவிர, வேறு உருப்படியான நடவடிக்கை இல்லை. பாஜகவின் நிழல் அரசியல்: தமிழகத்தில் பாஜக, அதிமுகவை ஒரு ஊன்றுகோலாக மட்டுமே பயன்படுத்துகிறது. அமித் ஷா போன்றவர்கள் மேடையில் எடப்பாடி பழனிசாமியை ஒரு முதலமைச்சர் வேட்பாளராகக்கூட அங்கீகரிக்கத் தயங்குவது, இக்கூட்டணிக்குள் நிலவும் முரண்பாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.</p>
<p><strong>விஜய் திரையிலிருந்து தரைக்கு வராத பிம்ப அரசியல்</strong></p>
<p>திரையுலகில் உச்சநட்சத்திரமாக இருக்கும் விஜய், அரசியல் களத்திற்கு வந்திருப்பது ஒரு புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அவரது அரசியல் செயல்பாடுகள் இன்னும் ‘பனையூர்’ பங்களாவைத் தாண்டவில்லை. வாரம் ஒருமுறை அரசியல்: அரசியலை ஒரு முழுநேரப் பணியாகப் பார்க்காமல், எப்போதாவது வெளி வருவது மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைக்கத் தவறிவிட்டது. தவெக தலைவர் விஜய், இன்னும் மக்களை ‘வாடிக்கையாளர்களாகவே’ அணுகு கிறாரே தவிர, அவர்களோடு ஆத்மார்த்த மாக நெருங்கிச் செல்லும் போராட்டக் குணத்தைக் காட்ட இயலவில்லை. மமதை கலந்த பேச்சுக்கள்: “என்னைத் திட்டினால் மக்களைத் திட்டுகிறீர்கள்” என்பது போன்ற அவரது உரைகள், ஆரோக்கியமான விமர்சனங்களை ஏற்கும் பக்குவம் அவரிடம் இல்லை என்பதையே காட்டுகிறது. சினிமாவில் சுறாவாகவும், வீரபாண்டிய கட்டபொம்மனாகவும் தோன்றுவது வேறு; நிஜ அரசியல் களத்தில் சேற்றில் இறங்கி நாற்று நடுவது வேறு என்பதை அவர் உணர வேண்டும். இரண்டாம் கட்டத் தலைமை இன்மை: ஒரு தனிமனித பிம்பத்தை மட்டுமே நம்பி கட்சி நடத்துவது ஜனநாயகத்திற்கு நீண்ட காலப் பயன் தராது. விஜய்க்கு அடுத்து பேசுவதற்கோ, கொள்கைகளை விளக்குவதற்கோ ஒரு வலிமையான இரண்டாம் கட்டத் தலைமை இல்லாதது அக்கட்சியின் மிகப்பெரிய ஓட்டை.</p>
<p>பணபலத்தையும், சினிமா பிம்பத்தையும் மட்டுமே நம்பி 2026 தேர்தலை எதிர்கொள்ளத் துடிக்கும் அதிமுக - பாஜக கூட்டணியும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும், கொள்கை ரீதியான அரசியலில் இன்னும் பின்தங்கியே இருக்கின்றன. திமுகவின் கூட்டணி பலம் மற்றும் திட்டங்களுக்கு மாற்றாக ஒரு வலிமையான சித்தாந்தத்தையோ அல்லது மக்கள் போராட்டத்தையோ முன்னெடுக்காத வரை இவர்கள் களத்தில் பின்தங்கியே இருப்பார்கள்.</p>
