கொரோனாவுக்குப் பின் இதய நாள தளர்ச்சியால் பாதிப்போர் அதிகரிப்பு அரசு மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் தகவல்
8 Dec 2025, 4:39 pm
<p><strong>கொரோனாவுக்குப் பின் இதய நாள தளர்ச்சியால் பாதிப்போர் அதிகரிப்பு அரசு மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் தகவல் </strong></p>
<p>சென்னை, டிச. 8- கொரோனா பெரும் தொற்றுக்கு பிறகு இதய நாளத் தளர்ச்சி பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்திருக்கிறது என தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றனர். சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை மருத்துவர்கள் 2017-2023 வரை 19,720 பேரின் ஆஞ்சியோ பரிசோதனை முடிவுகளை ஒப்பிட்டு ஒரு ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வு அறிக்கை ஐரோப்பியன் ஹார்ட் ஜர்னல் என்ற உலகப் புகழ்பெற்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது. இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள் ஒன்றரை மடங்கு அல்லது அதற்கு மேல் வீக்கமடையும் நிலையை இதய நாளத் தளர்ச்சி என்கிறோம். இதன் காரணமாக இதயத்தில் தசைகளுக்கு செல்லும் ரத்தம் ஓட்டம் குறையும் அல்லது தடைபடும். இதனால் நாளங்களில் ரத்த உறைவு ஏற்பட்டு மாரடைப்பு அல்லது வேறு விதமான தீவிர இதய பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன்பு அரிதானதாக இருந்த இதய நாளத் தளர்ச்சி பிரச்சனை இப்போது கணிசமாக அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனாவுக்கு முன் 15 விழுக்காடாக இருந்த இதய நாளத் தளர்ச்சி விகிதம் கொரோனாவுக்கு பிறகு 62 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இந்த ஆய்வு அறிக்கையின் படி இணை நோய்கள் இல்லாத இளம் வயதினருக்கு இதய நாளத் தளர்ச்சி பாதிப்பு இரு மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக 30 முதல் 40 வயது உட்பட்டவர்களில் அதன் விகிதம் 7 விழுக்காட்டில் இருந்து 14 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் புகைபிடிப்பதை அறவே தவிர்ப்பதோடு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த அளவுகளை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் ஆபத்துகளை தவிர்க்க அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.</p>
