15 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு சாதனை
8 Jun 2026, 11:15 pm
<p><strong>15 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு சாதனை </strong></p><p>சென்னை, ஜூன் 8- உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234 சார்பில் சென்னை தரமணி பல்கலைக்கழக வளாகத்தில் “அமிர்த வனம் – நகரத்தின் நுரையீரல்” எனும் பிரம்மாண்ட மரம் நடும் திட்டம் நடைபெற்றது. சென்னையின் பசுமைப் போர்வையை அதிகரித்து, அடர்த்தியான நகர்ப்புறக் காட்டை உருவாக்கும் நோக்கில், ஒரே நாளில் 15,000 மரக்கன்றுகள் நடப்பட்டு வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டது. மெட்ராஸ் ரோட்டரி சங்கம், மெட்ராஸ் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், மாவட்ட ரோட்டராக்ட் கவுன்சில் மற்றும் ‘பசுமைத் தமிழ்நாடு இயக்கம்’ ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இத்திட்டம் சாத்தியமானது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வி. கே. ராஜீவ், மரக்கன்றுகளை நட்டுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அரசு மற்றும் சமூக அமைப்புகளின் கூட்டு முயற்சி அவசியம் என்றும், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியைப் பொதுமக்கள் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் வினோத் சராவ்கி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நிர்வாகிகள் ரவி சுந்தரேசன், டாக்டர் எஸ். ஆம்ஸ்ட்ராங் மற்றும் நூற்றுக்கணக்கான மாணவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் திரளாகப் பங்கேற்றனர்.</p>
