தஞ்சை தமிழ் பல்கலைக்கழக இலக்கிய துறை சார்பில் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்ட அழைப்பிதழில் திருவள்ளுவர் படம் வைத்துள்ள விதம் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளுவருக்கு காவி நிற உடை ருத்திராட்சம் திருநீறு பட்டையடித்து இருப்பது போன்ற படத்தை பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. இதைத்தொடர்ந்து. பிள்ளையார்பட்டி அருகில் உள்ள வல்லம் பகுதியில் இருந்த திருவள்ளுவர் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் சாணி வீசி அவமதிப்பு செய்தனர். இதையடுத்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் அவமரியாதை செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு காவி துணி ருத்ராட்ச மாலை அணிவித்து சூடம் காட்டியது இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தது. ஹ
இந்த நிலையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக இலக்கிய துறை சார்பில் நவம்பர் 13-ந் தேதி சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதற்காக அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்ட அழைப்பிதழில் திருவள்ளுவர் படம் வைத்துள்ள விதம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அந்த அழைப்பிதழில் திருவள்ளுவர் வலது கையில் இருக்க வேண்டிய எழுத்தாணி இடது கையிலும், இடது கையில் இருக்க வேண்டிய சுவடி வலது கையிலும் இருப்பது போல் மாற்றி அச்சடிக்கப்பட்டுள்ளது.
பல்கலை நிர்வாகத்தின் அலட்சியத்திற்கு தமிழ் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் புதிய அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு மீண்டும் வழங்கப்பட்டது.