tamilnadu

img

தமிழகம் முழுவதும் இன்று மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

தமிழகம் முழுவதும் அடுத்த 24 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரம் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது;-
“கேரளா மற்றும் தமிழக எல்லையை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 
தர்மபுரி, சேலம், நாமக்கல், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.  சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று அவர் தெரிவித்தார்.  மேலும், தமிழகத்தில் கடந்த அக்டோபர் 1 முதல் இன்று வரை 43 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும், இது இயல்பை விட 5 சதவீதம் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 

;