tamilnadu

img

100 அடியை நெருங்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர்:
நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் செவ்வாயன்று (ஆக. 11) 95.10 அடியாக உயர்ந்துள்ளது.கர்நாடக மாநிலத்தில் கடந்த வாரம் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந் தது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகமானதால், காவிரி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.

 இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கொண்டே வந்தது. இதன்படி திங்களன்று   வினாடிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடி  தண்ணீர் வந்து கொண்டிருந்தது.நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. திங்களன்று ஒரே நாளில் அணையின் நீர்மட் டம் 11 அடி உயர்ந்தது. கடந்த 4நாட்களில் அணையின் நீர்மட்டம் 48அடி உயர்ந்தது.இதனால் செவ்வாயன்று நீர்மட்டம் 95.10 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர் வரத்தால்  மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை நெருங்குகிறது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடியில் இருந்து 80 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. நீர்இருப்பு 58.67 டிஎம்சியாக உள்ள நிலையில் பாசனத்துக்காக 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.இதனிடையே கர்நாடக மாநிலத்தில் தீவிரமடைந்த பருவமழை தற்போது குறைந்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து மீண்டும் குறைய வாய்ப்பு உள்ளது.

;