tamilnadu

img

அரசாங்கத்தைக் கேள்வி கேட்கும் உரிமையை மத்திய அரசு பறிக்கிறது.... முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி கருத்து

புதுதில்லி:
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் கைவிடப்பட்டிருப்பது, அரசமைப்புச் சட்டத்தின்கீழ் அரசாங்கத்தைக் கேள்வி கேட்கும் உரிமையைப் பறிக்கும் செயலாகும் என்று குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்றைய ‘தி இந்து’ நாளிதழில் கட்டுரை ஒன்றை அவர் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:இந்திய மக்களாகிய நாம், நாமாகவே ஏற்படுத்திக்கொண்ட அரசமைப்புச்சட்டம், நம்முடைய ஜனநாயகத்திற்காக, ஒரு நாடாளுமன்ற வடிவத்திலான அரசாங்கத்தை அமைத்துக்கொள்ளவும், அதன்படி அரசாங்கம் நாடாளுமன்றம்/சட்டமன்றங்கள் மூலமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்குப் பதில் சொல்லக்கடமைப்பட்டது என்றும் வரையறுத்திருக்கிறோம். அரசாங்கம் இவ்வாறு பொறுப்புடன் இருப்பது என்பதுதான் ஜனநாயக அரசாங்கத்தின் இதயமாகும். இது நாடாளுமன்ற/சட்டமன்றங்களின் நடைமுறைகள் மூலமாக அமல்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற/சட்டமன்றங்களின் நடைமுறைகள் என்பனவற்றில் சட்டமியற்றுதல், நாட்டின் நிதிநிலைமைகளைக் கட்டுக்குள் வைத்தல், வரிவிதிப்புக் கொள்கைகளுக்கு ஒப்புதல் அளித்தல் மற்றும் பொதுநலன் சார்ந்த பிரச்சனைகள் மீது விவாதங்கள் நடத்தல் முதலியனவுமாகும். இந்தச் செயல்பாடுகள் அனைத்தும், நாடாளுமன்றம்/சட்டமன்றங்கள் நடைபெறுகையில் தினந்தோறும் அல்லது குறிப்பிட்டக் கால இடைவெளியில், கேள்விகள் கேட்பதன் மூலமும்,ஒத்திவைப்புத் தீர்மானங்கள் கொண்டு வருவதன் மூலமும், கவன ஈர்ப்புத் தீர்மானம்கொண்டுவருவதன் மூலமும், அரை மணி நேர விவாதம் நடத்துவதன் மூலமாகவும், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதன் மூலமாகவும் மற்றும் உரிமை மீறல் பிரச்சனை தொடர்பான விஷயங்களை எழுப்புவதன் மூலமாகவும் நிறை வேற்றப்படுகின்றன.

நாட்டின் நாடியை பிடித்துப் பார்க்க
கேள்வி நேரம் என்பது அரசாங்கத்தைப் பொறுப்பாக்கும் கருவியாகும்நாடாளுமன்ற/சட்டமன்றங்களின் செயல்பாடுகளில் அரசாங்கத்தை நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பொறுப்பாக்கும் கருவியில் மிகவும் முக்கியமானது ‘கேள்வி நேரம்’ என்பதாகும். நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளில் இதற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இது அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும், அது உள்நாட்டுப் பிரச்சனையாக இருந்தாலும் சரி அல்லது வெளிநாட்டுப் பிரச்சனையாக இருந்தாலும் சரி, கேள்விக்கு உள்ளாக்குகிறது. இதன்மூலம் நாட்டின் நாடியைப் பிடித்துப்பார்க்க அரசாங்கத்திற்கு இது உதவுகிறது. மேலும் இதன்மூலம் மக்களும், தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும், அமைச்சர்களும் செயல்படும் விதம் குறித்தும் அறிந்துகொள்ள முடியும்.   உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் கூறும்போது தடுமாறுகிறவர்கள் அரிதாகவே மறக்கப்படுவார்கள்.  கேள்விகள் பொதுவாக ஒரு பிரச்சனைகுறித்துக் குறிப்பாகவும், கறாராகவும் கேட்கப்படுவதால் அதன்மீது அரசாங்கத்திட மிருந்து சரியான தகவல் எதிர்பார்க்கப் படுகிறது. நம் நாடாளுமன்ற வரலாற்றில் பலகேள்விகளுக்கு அரசாங்கம் அளித்துள்ளபதில்கள் விரிவான அளவில் விவாதங்கள்நடத்திடவும், விசாரணைகள் நடத்திடவும், ஏன், நிர்வாக ஊழல்களை வெளிக்கொ ணரவும் இட்டுச்சென்றிருக்கின்றன.  எனவேதான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அறிவார்ந்த குடிமக்கள், நாடாளுமன்றத்தின் கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனால்தான் செப்டம்பர் 14 தொடங்கும் நடைபெறவிருக்கும் மழைக்காலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் இல்லைஎன்று செய்தி வெளிவந்ததும் அதிர்ச்சிக் குள்ளாகி இருக்கிறார்கள்.இதற்கு அரசாங்கத்தின் தரப்பில் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று உருவாக்கியுள்ள நிலை என்று கூறப் பட்டிருக்கிறது.

பொருத்தமற்ற காரணம்
கொரோனா வைரஸ் தொற்றைக் காரணம் காட்டுவது பொருத்தமற்ற ஒன்று. இதனைக் கூறி, கேள்வி நேரத்தை நீக்கியிருப்பது திகைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அரசாங்கத்தைக் கேள்வி கேட்கும் உரிமையை வெட்டிக்குறைத் திருப்பதாகவே கருதப்படுகிறது. இப்போது, நட்சத்திரக் குறியல்லாத கேள்விகள் (unstarred questions) தொடரும் என்று தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. எனவே கேள்வி நேரத்தில் நட்சத்திரக் கேள்விக்கு அமைச்சர் பதிலளிப்பதும் அதன்மீது துணைக் கேள்விகள் எழுப்பப்
பட்டால் அவற்றுக்குப் பதிலளிப்பதும் இல்லை என்பது தெளிவாகி இருக்கிறது.ஜனநாயகத்தின் செயல்பாட்டில் தன்னைச் சோதித்துப் பார்ப்பது என்பது, நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான திறமை தன்னிடம் இருக்கிறதா என்பதற்காகவேயாகும். அது சமூகரீதியான தாகவோ, பொருளாதார ரீதியானதாகவோ அல்லது அரசியல்ரீதியானதாகவோ இருக்கலாம். எத்தகைய நெருக்கடியாக இருந்தாலும் அதனைச் சரிசெய்யக் கோருவதுதான் ஜனநாயக நிறுவனங்களின் கடமைகளாகும். அவ்வாறு கோருவதைத் தவிர்க்கும் விதத்தில் ஒருவிதமான ‘தவிர்ப்பு அரசியலை’ (‘politics of avoidance’) மேற்கொள்வது,  எவ்விதத் தலும் உதவிடாது.இவ்வாறு ஹமீத் அன்சாரி குறிப்பிட்டுள்ளார். (ந.நி.)

;