tamilnadu

img

பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத் கீதையா? - அறிவிப்பை திரும்பபெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு-புதுச்சேரி மாநிலக்குழு கூட்டம் செவ்வாய்கிழமை செப்24-ல் துவங்கி மூன்று நாட்கள் புதுச்சேரியில் நடைபெறுகிறது. கட்சியின் தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழ்மாநில  செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், டி.கே.ரங்கராஜன் எம்.பி., உ.வாசுகி, பி.சம்பத், அ.சவுந்தரராசன் உட்பட மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இன்றைய (25.09.2019) கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

தேசியக் கல்விக் கொள்கை 2019 குறித்த வரைவு அறிக்கையினை மத்திய அரசு பொதுத்தளத்தில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி வெளியிட்டது. நாடு முழுவதிலும் இருந்து, குறிப்பாக தமிழகத்திலிருந்து, இந்த வரைவறிக்கைக்கு எதிராக பல விமர்சனங்கள், கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த வரைவறிக்கை சாதாரண மக்களுக்கான கல்வியை வழங்கும் கொள்கையாக இல்லாமல், மேட்டுக்குடிக்காரர்களுக்கானதாகவும், தனியார்மயம், வகுப்புவாதம், அதிகாரக் குவிப்பை ஊக்கப்படுத்துவதாகவும் உள்ளது என்றும், ஆகவே இவ்வறிக்கையை புறந்தள்ளி கல்வியாளர்களைக் கொண்டு இந்திய அரசியல் சாசன விழுமியங்கள் அடிப்படையிலான அனைத்து மக்களுக்கான கல்விக் கொள்கையை வகுத்திட மத்திய அரசினை வலியுறுத்தி குரல் எழுப்பி வருகின்றனர். பொது மக்களிடம் பெற்ற கருத்துக்களைப் பரிசீலித்து வருவதாக மத்திய அரசு கூறி வரும் நிலையில், எஜமானனுக்கு மிஞ்சிய விசுவாசியாக, மத்திய அரசிற்கு முந்தியே, தேசியக் கல்விக் கொள்கை 2019 வரைவறிக்கை இறுதி செய்யப்படும் முன்னரே, அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ள 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது இறுதித்தேர்வு, செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளை மூடும் பள்ளி வளாகத்  திட்டம் ஆகியவற்றை தமிழகத்தில் இந்த ஆண்டே அமல்படுத்தப்போவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு இளம் மாணவர்கள் மத்தியில் உளவியல் ரீதியாக மன உளைச்சலை ஏற்படுத்தும். இடை நிற்றலை அதிகப்படுத்தும். கிராமப்புற  பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும். மேலும் பள்ளிகள் ஒருங்கிணைப்பு என்ற  பெயரில் மூடப்படுவதால், கிராமப்புற மாணவர்கள் அதிக தூரம் நடந்து சென்று பயில வேண்டியிருக்கும்.

மேலும் ஆசிரியர் பற்றாக்குறையுள்ள பள்ளிகளில், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வழங்கும் பகுதி நேர ஆசிரியர்களைப் பயன்படுத்தலாம் எனவும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியர் பயிற்சி முடித்து வேலைவாய்ப்புகளுக்காக ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு அநீதியானது மட்டுமல்ல, அபாயகரமானதும் ஆகும். முறையான பயிற்சி பெற்று நியமனம் பெறும் ஆசிரியரின் இடத்தினைத் தன்னார்வத் தொண்டு ஊழியர் இட்டு நிரப்பிட முடியாது. கூடுதலாக, உள்ளூர் மட்டத்தில் உள்ள சாதீய, மத அடிப்படையிலான அமைப்பினர் கல்விச் சாலைகளில் புகுந்து கல்விச் சூழல் கெடும் அபாயம் உள்ளது. எந்தவித முன் கலந்தாலோசனை இல்லாமல், இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

பள்ளிக் கல்விச் சூழலைப் பாதிக்கும் பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்புகளை தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிப்பதோடு தமிழக மாணவர்களின் நலன் கருதி அந்த அறிவிப்புகளை உடனடியாக திரும்பப்பெற  தமிழக அரசினை வலியுறுத்துகிறது.

மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத்கீதை மற்றும் தத்துவவியல் பாடம் அறிமுகப்படுத்துவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய  தொழில் நுட்பக்கழகத்தின் பரிந்துரையின்படி, இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பில் பகவத் கீதை பாடம் என்பது வன்மையாக கண்டிக்கக்கது. மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கு எதிரானது. அனைத்து மத மாணவர்களும் படிக்கும் ஒரு படிப்பில் குறிப்பிட்ட மத போதனையை புகுத்துவதும், இதற்கு தமிழக அதிமுக அரசு துணைபோவதும் ஏற்கத்தக்கது அல்ல. இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பபெற  வேண்டும் என மாநிலக்குழு வலியுறுத்துகிறது.
 
 

;