tamilnadu

img

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கூடுதல் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க கோரிக்கை

சென்னை:
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கூடுதல் கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசும் பள்ளிக்கல்வித்துறையும் செய்துதரவேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான  சங்கம் வலியுறுத்தியுள்து.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் பா.ஜான்சிராணி, பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:+2 முடிவுகளின்படி, தேர்வு எழுதியவர்களில் பார்வைத்திறன் 95.58விழுக்காடு, செவித் திறன் 82.09 விழுக்காடு, உடல்ஊனமுற்றோர் 89.59 விழுக்காடு ஏனைய வகை மாற்றுத்திறனாளர்- 87.49 விழுக்காடு என்ற விகிதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு வாழ்த்துக்களையும், பாடுபட்ட அனைத்து ஆசி
ரிய பெருமக்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். அரசு இணையதளத்தில் அனைத்துப் பாடங்களையும் யுனிக்கோட் முறையில் டெக்ஸ்டாக பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் மூலம் பார்வைத்திறன் மாணாக்கர்கள் எளிதாகவும் முழுமையாகவும் கற்க வழிவகை செய்ய வேண்டும்.

தமிழக அரசு வழங்கும் மடிக்கணினியுடன், டெக்ஸ்டில் இருந்து பிரெயில் முறைக்கு மாற்றித்தரும் ‘ஆர்பிட் ரீடர்’ கருவி போன்றவை பார்வைத்திறன் மாணாக்கர்களுக்கு வழங்க வேண்டும். பிரெயில் புத்தகங்களை காலதாமதமின்றி வழங்க வேண்டும்.தற்போது இல்லாத கணிதம் உள்ளிட்ட பாடங்களை, தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி பார்வைத்திறன் மாணாக்கர்கள் படிக்க முடியும் என்பதால், அப்படிப்பட்ட பாடங்களையும் புகுத்த வேண்டும்.  பொதுப்பள்ளிகளில்  பார்வைத்திறன், செவித்திறன் உள்ளிட்ட அனைத்து மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு  ஒவ்வொரு பாடத்திற்கும் தேவையான உரிய சிறப்பாசிரியர்கள் நியமிக்க வேண்டும். மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு தேவைப்படும் கருவிகள் மற்றும் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும்.

தற்போது பொதுப்பள்ளிகளில் மாற்றுத் திறன் மாணாக்கர்களுக்கான போதிய கட்டமைப்பு வசதி இல்லாததால், உயர்நிலை மேல்நிலை கல்விக்காக  சிறப்பு பள்ளிகளுக்கும் மாற்றுத்திறன் மாணாக்கர்கள் அதிக அளவில் வருகின்றனர்.  எனவே, சிறப்பு பள்ளிகளில் சிறப்பாசிரியர்களை தேவைக்கேற்ப கூடுதலாக நியமிக்க வேண்டும்.பார்வைத்திறன் மாணாக்கர்களுக்கு பார்வைத்திறன் ஆசிரியர்களையும், செவித் திறன் மாணாக்கர்களுக்கு செவித்திறன் ஆசிரியர்களையும் கூடுதலாக நியமிப்பது பயன்படும். இவைகள் எல்லாம் மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு சட்டப்பூர்வ உரிமை என்பதை உணர்ந்து பள்ளிக்கல்வித்துறையும், தமிழக அரசும் செயலாற்ற வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

;