tamilnadu

img

சிஐடியு மூத்த தலைவர் தோழர் ஏ.ஜி.காசிநாதன் காலமானார்..

சென்னை:
சிஐடியு மத்திய சென்னை மாவட்டதுணைத்தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினருமான தோழர் ஏ.ஜி.காசிநாதன் சென்னையில் சனிக்கிழமை (பிப்.13) காலமானார்.  அவருக்கு  வயது 72.

சென்னை கிண்டியில் பொதுத் துறை நிறுவனமாக இருந்த இந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் நிறுவனத்தில் (எச்.டி.எல்)  1974 ல் சாதாரண தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கிய அவர், கடந்த 50 ஆண்டுகளாக தொழிற் சங்ககட்சிப்பணியில் தீவிரமாக செயல்பட்டார்.சிஐடியு மாநிலக்குழு உறுப்பினராக, கட்சியின் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினராக பிறகு மத்திய சென்னை மாவட்டக்குழு உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.மதுரையில் இருந்து வந்தபோதுஆன்மீகத்தில் பெரிதும் ஆர்வம்கொண்டி ருந்தார். தொழிற்சங்க இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றிய பின்னர் மார்க்சியத்தின் பால் ஈர்க்கப்பட்டு தீவிர தொழிற்சங்க தலைவராகவும் மார்க்சிஸ்ட்டாகவும்  மாறினார். தொழிற்சங்கத்தில் பணியாற்றும்பேது நம்பிக்கையூட்டும் முறையில் தொழி லாளர்களை திரட்டுவதில் அவர்  முக்கிய பங்காற்றினார். அவரச நிலை காலத்திலும் அவர் மிகவும் தீவிரமாக செயல்பட்டார்.

ஹிந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ்சங்கத்தில் 3 முறை பொதுச்செயலாளராக பணியாற்றினார். தொடர்ந்து நிர்வாகபொறுப்பில் இருந்தார். கிண்டி எஸ்டேட்பொதுத்தொழிலாளர் சங்கத்திலும்பொறுப்பில் இருந்தார்.  10 ஆண்டுகளுக்குப் பிறகு  வடசென்னை மாவட்டக்குழுவில் இருந்து தொழிற்சங்க பணியாற்றினார். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பல நிறுவனங்களில் தொழிற் சங்கத்தை உருவாக்கி சிஐடியுவை பலப்படுத்தினார்.தோழர் காசிநாதன் மறைவு சென்னை மாநகர தொழிற்சங்க இயக்கத்திற்கு பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு சிஐடியு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தோழர் ஏ.ஜி.காசிநாதன் உடல்சென்னை மடிப்பாக்கம் எண்7, குபேரன்நகர், 2வது தெரு, (வேம்புலியம்மன் கோவில் அருகில்)  என்ற முகவரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப் பட்டுள்ளது. ஞாயிறன்று பிற்பகல் 12.30 மணிக்கு கீழ்கட்டளை மின் மயானத்தில்  இறுதி நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிஐடியு இரங்கல்
ஒன்றுபட்ட சென்னை மாவட்டதொழிற்சங்க தலைவர்களில் ஒருவரும், இந்துஸ்தான் டெலிபிரிண்டர் சங்கமுன்னோடியுமான மறைந்த தோழர்ஏ.ஜி.காசிநாதன்  அவர்களுக்கு சிஐடியுதமிழ்நாடு மாநிலக்குழு செவ்வஞ்சலியை செலுத்துகிறது. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் தோழர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் என்று பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் தெரிவித்துள்ளார்.

;