tamilnadu

img

பாஜகவின் உற்ற தோழனாகி விட்ட கேரள முஸ்லீ்ம் லீக் போலி கையெழுத்து- பொய் பிரச்சாரம் அம்பலம்.... மின்னணு கையொப்பம் குறித்து முதல்வர் விளக்கம்

திருவனந்தபுரம்:
தனது பெயரில் போலி கையெழுத்திட்டதாக பாஜகவும் அதை ஏற்றுக்கொண்டு யுடிஎப் தலைவர்களும் கூறி வந்த குற்றச்சாட்டுகளை கேரள முதல்வர் பினராயி விஜயன் மின்னணு முறை கையொப்பம் குறித்து விளக்கி அம்பலப்படுத்தினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நடப்பது என்ன என்பதை அறிந்து கொள்ளாமல் பாஜக இப்படி ஒரு புகாரை கூறியுள்ளது. அமெரிக்காவில் நான் (மருத்துவ சிகிச்சையில்) இருந்த போது மின்னணு கோப்புகளாக பெற்று ஒப்பமிட்டு வந்தேன். மலையாள மொழி தினத்தின் கோப்பில் ஒப்பமிட்டது நான் தான். ஒப்பம் போலியானது அல்ல. செப்டம்பர் 6 ஆம் தேதி இது போன்ற 39 கோப்புகள் டிஜிட்டல் முறையில் ஒப்புதல் அளித்தேன் என தனது ஐபேடை உயர்த்திப் பிடித்தபடி பதிலளித்தார்.

24.8.2013-இல் அரசு பிறப்பித்த உத்தரவில், அலுவலகத்துக்கு வெளியே இருக்கும் இத்தகைய சூழ்நிலையில் மின்னணு மென்பொருள் (இ-சாப்ட்வேர்) பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. பயணத்தில் இருக்கும் அனைத்து நாட்களிலும் இத்தகைய முறையில் கோப்புகளில் கையெழுத்திடப்படுகிறது என்றும் முதல்வர் தெரிவித்தார்.    பாஜக கூறியதை காங்கிரசை விட உறுதியுடன் முஸ்லீம்லீக் ஏற்றுக்கொண்டுள்ளது. பாஜகவின் உற்ற தோழனாக முஸ்லீம்லீக் மாறியுள்ளது. முதலில் பாஜக கூற வேண்டியது, பின்னர் அதற்கு வலு சேர்க்க யுடிஎப் தலையிடுவது- இதுதான் இப்போது நடக்கிறது. குற்றச்சாட்டு கூறியவருக்கு இந்த தொழில்நுட்பம் புரியாமல் போயிருக்கலாம். ஆனால், நீண்டகாலம் அமைச்சராக இருந்த பி.கே.குஞ்ஞாலிக்குட்டி போன்ற ஒருவருக்கு இந்த தொழில்நுட்பம் தெரியாமல் போக வாய்ப்பில்லை என்றும் முதல்வர் கூறினார். 

கேரள முதல்வரின் தனி செயலாளராக சென்ற ஆண்டு வரை எம்.வி.ஜெயராஜன் செயல்பட்டு வந்தார். அப்போது, அவர் போலியாக முதல்வரின் கையெழுத்திட்டார் என்கிற பாஜக- யுடிஎப் குறச்சாட்டு பொய் என்பதை முதல்வரின் விளக்கம் அம்பலப்படுத்தியது. 

;