tamilnadu

திருப்பூரில் சிசிடிவி பொருத்திய கடையில் ஹெல்மெட் அணிந்து களவாடிய திருடன்

திருப்பூர், ஏப். 20 -செல்போன் கடையில் புகுந்தவுடன் சிசிடிவி கேமரா இருப்பதைக் கண்ட உடன் மர்மநபர் ஹெல்மெட் அணிந்து, செல்போன்களைத் திருடிச் சென்றார்.திருப்பூர் அனுப்பர்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் ஷ்யாம் என்பவர் செல்போன் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வெள்ளியன்று இரவு கடையை வழக்கம் போல அடைத்து விட்டுச் சென்றார். இந்நிலையில் சனியன்று காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கள்ளாபெட்டியில் இருந்த பணம் மற்றும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த செல்போன்கள் திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதிகாலை 4 மணியளவில் இந்த கடையின் பூட்டை உடைத்து உள்ளே ஒரு நபர் நுழைந்து, அங்கு சிசிடிவி காமிரா இருப்பதைப் பார்த்தவுடன், தான் கொண்டு வந்திருந்த ஹெல்மெட்டை அணிந்து கொண்டார். பின்னர் கடையில் இருந்த விலை உயர்ந்த 6 செல்போன்களை திருடிச் சென்றுள்ளார்.இது குறித்து வழக்கு பதிவு செய்த 15 வேலம்பாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;