நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில், இந்திய வீரரான டோனி இதுவரை 350 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய முதல் விக்கெட் கீப்பர் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் நேற்று மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்து, 46.1 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் சேர்த்தது. மழை காரணமாக, ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டு இன்று மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டது.
இந்த போட்டியில் களமிறங்கியதன் மூலம் இந்திய அணியின் அனுபவ வீரரான டோனி 350 போட்டிகளில் விளையாடி உள்ளார். இதன்மூலம் உலக அளவில் 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 10வது வீரர் எனும் பெருமையையும், இந்திய அணியில் சச்சினுக்கு பிறகு 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் எனும் சிறப்பைப் பெற்றார். குறிப்பாக, ஒரு விக்கெட் கீப்பராக 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் எனும் புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
டோனிக்கு முன்னதாக இலங்கை அணியின் சங்ககரா, 360 ஒருநாள் போட்டிகளில் பங்குப் பெற்றாலும் 44 போட்டிகளில் விக்கெட் கீப்பராக பங்குபெறவில்லை. இதுமட்டுமின்றி 350 ஒருநாள் போட்டிகளில் 200 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட முதல் இந்திய வீரர் எனும் பெருமையையும் டோனி படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.