tamilnadu

தூர்வாரும் பணியில் கடலூர் மாவட்டத்தை இணைக்க வேண்டும்: சி.பி.எம். வலியுறுத்தல்  

கடலூர், மே 24- டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணியில் கடலூர் மாவட்டத்தையும் இணைத்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் பொதுப் பணித்துறை சார்பில் டெல்டா மாவட்டங்களில் தூர்வரும் பணிக்கு ரூ.67.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த மாவட்டங்களில் நிறைவேற்ற வேண்டிய பணிகளின் எண்ணிக்கையையும், இந்த பணிகளை மேற்பார்வையிடுவதற்கான அதிகாரிகளின் பட்டியலையும் பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது. ஆனால் டெல்டா பாசனப்பகுதியில் முக்கியமான மாவட்டமாக உள்ள கடலூர் மாவட்டம் பட்டியலில் இடம் பெறவில்லை.  இந்த மாவட்டத்திற்கு நிதியும் ஒதுக்கப்படவில்லை. தமிழக அரசு இந்த பாரபட்சமான நடவடிக்கைகளை கைவிட்டு உடனடியாக கடலூர் மாவட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கி உத்தரவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். கடலூர் மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கிட தாங்கள் தலையிட்டு தமிழக அரசிடம் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

;