tamilnadu

img

காப்பீடு செய்யாவிட்டாலும் பயிர்களுக்கு இழப்பீடு.... வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்...

கடலூர்:
பயிர்களுக்குக் காப்பீடு செய்யாவிட்டாலும் பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடு வழங்கப்படும் என்று வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடலூரில் ஞாயிறன்று (ஆக. 22) செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

 நடப்பு குறுவை பருவத்திற்கான காப்பீடு ஏன் அறிவிக்கப்படவில்லை என்று கேள்வி எழுந்துள்ளது. காப்பீட்டு நிறுவனத்தைத் தேர்வு செய்யவேண்டியது தொடர் நடவடிக்கை யாகும்.  முந்தைய அதிமுக அரசு அதற்கான முயற்சியை மேற்கொள்ள வில்லை. திமுக அரசு அமைந்தவுடன் காப்பீட்டு நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்காக 3 முறை ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது. இதனை இறுதி செய்வதற்கான கால அவகாசத்திற்குள் 4.90 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுவிட்டது. இதுவரை, 54 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை செய்யப்பட்டு 3.27 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

எனவே, இனிமேல் குறுவை சாகுபடிக்கான காப்பீடு தேவைப்படாது. இருப்பினும் காப்பீடு இல்லாவிட்டாலும் பயிர்களுக்கு இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு  ஏற்பட்டால் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இன்னும் 20 நாட்களில் குறுவை சாகுபடிக்கான அறுவடைமுடிந்துவிடும். 2020-21ஆம் ஆண்டில் சம்பா பருவத்தில் நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்களுக்கு மாநில அரசுசெலுத்த வேண்டிய பிரீமியம் ரூ.1,248.92 கோடியைக் கடந்த 16ஆம் தேதிதான் அரசு விடுவித்துள்ளது.

கரும்பு விவசாயிகளுக்கு பாக்கித்தொகை
கரும்பு விவசாயிகளுக்குக் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் வைத்துள்ள நிலுவையில் ரூ.220 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. தனியார்சர்க்கரை ஆலைகள் சுமார் ரூ.1,500 கோடி வரையில் பாக்கி வைத்துள்ளன. விரைவில் முத்தரப்புக் கூட்டம் நடத்தப்பட்டு பாக்கி தொகையைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப் படும்.

உரத்தட்டுப்பாடு இல்லை
தமிழகத்தில் எங்கும் உரத் தட்டுப்பாடு இல்லை. தேவைப்படும் இடங்களுக்குத் தேவையான அளவு அனுப்பி வைக்கப்படுகிறது. மற்ற பயிர்களுக்கு காப்பீட்டு பிரீமியம் செலுத்த வரும் 31ஆம் தேதி கடைசிநாளாகும். கால நீட்டிப்பு செய்யும் வாய்ப்பு இல்லை. கூட்டுறவு கடன் சங்கங்களில் வழக்கம் போல அனைத்து கடன்களும் வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.இச்சந்திப்பின் போது மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம், காவல் கண்காணிப்பாளர் சி.சக்திகணேசன், சட்டப் பேரவை உறுப்பினர்கோ.ஐயப்பன்ஆகியோர் உடனி ருந்தனர்.

;