tamilnadu

img

சிபிஎம் செயலாளர் மீது அடையாளம் தெரியாத ரவுடிக்கும்பல் கொலை வெறி தாக்குதல்

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  கொடுமுடி தாலுகா செயலாளர் கே.பி. கனகவேல் மீது அடையாளம் தெரியாத ரவுடிக்கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதில் படுகாயமடைந்த கனகவேல் ஈரோடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 
ஈரோடு மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடுமுடி தாலுக்கா செயலாளராக கே.பி.கனவேல் இருந்து வருகிறார். மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக எப்போதும் முன்னிலையில் நிற்பவர். தகவல்பெறும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்தி பல்வேறு தகவல்களை பெற்று மக்களின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். 
இந்நிலையில் கொடுமுடி வட்டம் காரணாம்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து  ஞாயிறன்று மாலை சுமார்  7 மணியளவில் கட்சி பணி நிமித்தமாக வெளியே சென்றிருக்கிறார். அப்போது நோட்டமிட்டு பின்தொடர்ந்த ஓர் கும்பல் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் திடீரென கனவேலை கையில் வைத்திருந்த உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் கொலை செய்யும் நோக்கில் சரமாரியாக தாக்கியிருக்கின்றனர். சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்த நிலையில் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறது. 
இதில் கனகவேலின் தலையின் முன் பகுதி, கழுத்து, இடுப்பின் இடது பகுதி, வலது கணுக்கால் ஆகிய இடங்களில் படுகாயமடைந்த நிலையில் கிடந்திருக்கிறார். பின்னர் கனவேலை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் ஈரோடு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கா அனுப்பி வைத்திருக்கின்றனர். 
பின்னர் தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, ஈரோடு மாட்ட செயலாளர்  ஆர்.ரகுராமன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு சென்று கனகவேலுக்கு ஆறுதல் தெரிவித்தனர். கட்சியின் மாநில செயலாளர்  கே.பாலகிருஷ்ணன் தொலைபேசியில் கனகவேலை தொடர்பு கொண்டு  நடந்த விபரங்களை கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.
 கனகவேலை தாக்கிய  குற்றவாளிகளை உடனே காவல்துறை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  மேலும் இச்சம்பவம் குறித்து  ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளரை சந்தித்து விரைந்து நடவடிக்கை எடுக்க கட்சியின் தலைவர்கள் வலியுறுத்தினர். 
ஆர்ப்பாட்டம்.
 கொலை வெறித்தாக்குதலை கண்டித்தும், ரவுடிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தக்கோரியும் பிப்ரவரி  25 அன்று கொடுமுடி வட்டம் கருமாண்டம்பாளையம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 

;