tamilnadu

img

உண்மையை மறைக்கும் தென்னக ரயில்வே

தமிழக ரயில் திட்டங்களுக்கு நிதி எங்கே?

உப்பு கேட்டால் பருப்பு இருக்கிறது என்கிறார்கள்
சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு

மதுரை, பிப்.12- மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்கள் குறித்து ரயில்வே நிர்வாகம் “உண்மையை” மறைக்கிறது; உப்பு இருக்கிறதா என்று கேட்டால் பருப்பு இருக்கிறது என்கிறது. புதிய ரயில்வே திட்டங் களுக்கும், இரட்டை ரயில் பாதை திட்டங்களுக்கும் தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறினார்.

தென்னக ரயில்வே சொல்வது என்ன?

மதுரையில் புதனன்று செய்தி யாளர்களை சந்தித்த அவர் கூறிய தாவது:-  மத்திய பட்ஜெட்டில் தமிழகத் துக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தேன். இதைத் தொடர்ந்து தென்னக ரயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அலுவலர் பத்திரிக்கை குறிப்புகளை வெளியிட்டுள்ளார்.  கடந்த காலங்களில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தமிழகத்துக்கான பத்து புதிய வழித்தடங்களின் விபரங் களைச் சொல்லி அவை அனைத்துக் கும் தலா வெறும் ஆயிரம் ரூபாய் வீதம்  பத்தாயிரம் ரூபாய்தான் ஒதுக்கப் பட்டிருக்கிறது; ஆனால் வடக்கு இரயில்வேயில் புதிய வழித்தடங் களுக்கு சுமார் ரூ.7000 கோடி ஒதுக்கப் பட்டிருக்கிறது. இவை எதையும் அந்தச் செய்திக் குறிப்பு மறுக்கவில்லை. இதன் மூலம் தமிழகத்துக்கான பத்து புதிய வழித்தடங்களுக்கு பத்தா யிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப் பட்டுள்ளது என்பதை மீண்டுமொரு முறை தென்னக ரயில்வே நிர்வாகமே உறுதிப்படுத்தியுள்ளது. அதேநேரம் இரட்டை வழிப்பாதைக் கான திட்டங்களைப் பற்றிய விபரங்களை விளக்கியுள்ளனர். உப்பு எங்கே என்று கேட்டால் இதோ பருப்பு இருக்கிறது என்று கூறியுள்ளனர். சரி, இவர்கள் கொடுத்துள்ள ‘பருப்பின்’ விபரத்தை பார்த்தால் தென் மத்திய ரயில்வே, தென்மேற்கு ரயில்வே ஆகியவற்றின் திட்டங்களை தென்னக ரயில்வேயின் திட்டங்களாகக் கூறி யுள்ளனர்.

இரட்டைப் பாதை -  6 திட்டங்கள் எவை?

தென்னக ரயில்வே நிர்வாகத்தின் அறிக்கையில், தமிழகத்தில் இரட்டை வழிப் பாதைக்கான ஆறு திட்டங் களைக் குறிப்பிட்டு 826 கிலோ  மீட்டருக்கு 8501 கோடி ரூபாய் ஒதுக்கி யிருப்பதாக கூறுகின்றனர். அவர்கள் கூறும் ஆறு  திட்டங்களில், தர்மாவரம்-பாகலா-காட்பாடி இரட்டைப்பாதை (290 கிலோமீட்டர் - ரூ.2900 கோடி) திட்டம் தென் மத்திய ரயில்வேயின் திட்டம். இந்த வழித்தடத்தில் சுமார் 90 சதவீதம் ஆந்திர மாநிலத்திற்கானது. ஓசூர்- ஓமலூர் இரட்டைப்பாதை (147 கிலோ மீட்டர் - ரூ.1470 கோடி) திட்டம் தென்மேற்கு ரயில்வேயின் திட்டம், இந்த வழித்தடத் தில் சுமார் 90 சதவீதம் கர்நாடக மாநிலப் பகுதியாகும். தென் மத்திய ரயில்வே, தென்மேற்கு  ரயில்வே ஆகியவற்றின் திட்டங்களை தென்னக ரயில்வே தமிழ கத்தின் திட்டமாக எப்படிக் கூறுகிறது? இதற்கு தென்னக ரயில்வே நிர்வாகம் உரிய விளக்கமளிக்க வேண்டும். காட்பாடி-விழுப்புரம்,  சேலம்-கரூர்-திண்டுக்கல், ஈரோடு-கரூர். சென்னை பீச் – சென்னை எழும்பூர் ஆகிய நான்கு மட்டுமே தமிழகத்துக்கான தென்னக ரயில்வேயின் புதிய இரட்டை வழிப்பாதை திட்டங்கள். தென்னக ரயில்வே கூறியுள்ள 826 கிலோமீட்டர் தூர இரட்டை வழி பாதைக்காக ரூ.8,501 கோடி திட்டம் என்பது உண்மை யல்ல; 381 கிலோமீட்டர் தூர - ரூ.4,100 கோடி மதிப்பிலான திட்டங்கள் மட்டும்தான் தென்னக ரயில்வேயின் தமிழகத்துக்கான புதிய இரட்டை வழிப்பாதை திட்டங்களாகும்.

தலா ஆயிரம் ரூபாய்தான்

இதில் அதிர்ச்சிதரத்தக்க செய்தி  என்னவென்றால், ரயில்வே நிர்வாகம் சொல்கிற இரட்டை வழிப்பாதைக்கான ஆறு புதிய திட்டங்களுக்கும் இந்த ஆண்டு பட்ஜெட்டில் (2020-21) தலா 1,000 ரூபாய் வீதம் வெறும் 6,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தான். ஏற்கனவே குறிப்பிட்ட பத்து புதிய வழித்தடங்களுக்கு பத்தாயிரம் ரூபாயும், இப்பொழுது தென்னக ரயில்வே குறிப்பிட்டுள்ள ஆறு இரட்டை வழிப்பாதைக்கான திட்டங்களுக்கு ஆறாயிரம் ரூபாயும் தான் 2020-21 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப் பட்டுள்ளது. புதிய வழித்தடங்களுக்கான திட்டங்களிலும் சரி, புதிய இரட்டை வழிப்பாதைக்கான திட்டத்திலும் சரி தமிழகம் முற்றிலுமாக புறக்கணிக்கப் பட்டுள்ளது என்பதே உண்மை.

இதுகுறித்து ரயில்வே அமைச்சரை  ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் என்ற முறையில் சந்தித்து முறையிடுவேன் - தென்னக ரயில்வேக்கும் மற்ற ரயில்வேக்குமான நிதி ஒதுக்கீடு மலைக்கும் மடு விற்குமான வித்தியாசமாகும். தென்னக ரயில்வேக்கு மத்திய அரசு மிகமிகக் குறைவான நிதி ஒதுக்கீடு  செய்திருப்பது தொடர்பாக அனைத்து கட்சிகளும் கேள்வி எழுப்ப வேண்டும்.  ரயில்வே பட்ஜெட்டை முன்பு போல் தனியாக தாக்கல் செய்ய வேண்டும். குறைந்த நிதி ஒதுக்கீடு தொடர்பாக அடுத்தகட்ட போராட்டம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்யும்.

மெட்ரோ ரயில் திட்டம்

மதுரையில் மெட்ரோ ரயில் சேவை  தொடங்குவது தொடர்பாக தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பி யுள்ளேன். மதுரையைச் சேர்ந்த அமைச்சர்கள் மெட்ரோ ரயில் வருவதற்கு கூடுதல் அழுத்தம் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

-நமது நிருபர்



 

;