india

img

‘மண்டிகளுக்கு கடன்’ வழங்குவதாக கூறுவது திசைதிருப்பும் முயற்சி.... ரூ. 1 லட்சம் கோடி நிதியம் என்பதே ஒரு ஏமாற்று.... மோடி அரசுக்கு விவசாயிகள் சங்கங்கள் பதிலடி....

புதுதில்லி:
ஒன்றிய வேளாண் அமைச்சகத்தின் கீழ் புதிதாக வேளாண் உள்கட்டமைப்பு நிதியம் என்ற அமைப்பை கடந்த 2020 ஆகஸ்டில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிதியத்திற்கு ரூ. 1 லட்சம் கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதனிடையே வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 9) நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ. 1 லட்சம் கோடி கொண்ட வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தில் மண்டிகள் கடன் வாங்க அனுமதியளிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஒன்றிய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர், “புதிய வேளாண் சட்டங்களால் மண்டிகள் ஒழிக்கப்படுமோ? என்ற அச்சம் விவசாயிகளிடம் இருப்பதாகவும், தற்போதைய மண்டிகளுக்கான கடன்வசதி அறிவிப்பு மூலம் அந்த அச்சம் நீங்கும்” என்றும் தெரிவித்தார். மேலும் விவசாயிகள் சங்கங்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் கூறினார்.இந்நிலையில், அமைச்சரவையின் முடிவை, ஒரு திசைத்திருப்பும் நடவடிக்கை என்று விவசாயிகள் சங்கங்கள் விமர்சித்துள்ளன.இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 40 சங்கங்கள் அடங்கிய கூட்டு அமைப்பான ‘சம்யுக்தா கிசான் மோர்ச்சா’ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ரூ. 1 லட்சம் கோடி கொண்ட வேளாண் உள்கட்டமைப்பு நிதியம் என்று ஒன்றிய அரசு சொல்வதே ஒரு திசை திருப்பும் செயல்தான். ஏனென்றால், அரசுத்தரப்பில் இருந்து ஆயிரம் கோடி ரூபாய் கூட அதற்கு இன்னும் ஒதுக்கப்படவில்லை. 2020-2021 பட்ஜெட்டில் ரூ. 208 கோடியும், நடப்பு பட்ஜெட்டில் ரூ.900 கோடியும் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. கடன்களைப் பொறுத்தவரை, கடந்த மார்ச் 31 அன்றைய நிலவரப்படி, வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தில் இருந்து ரூ. 3 ஆயிரத்து 241 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.விவசாயிகள் தங்கள் கடனுக்காக, பெரும்பாலும் வர்த்தக வங்கிகளையே சார்ந்து இருக்க வேண்டி உள்ளது. வங்கிகளின் மோசமான நிர்வாகமும், பெருமுதலாளிகளுடனான அவர்களது தொடர்பும் ஏற்கெனவே தெரிந்த விஷயம்தான். வெறும் 3 சதவிகித வட்டி தள்ளுபடி செய்வதும், கடன் உத்தரவாதம் வழங்குவதும் மட்டுமே அரசின் வேலையாகாது.மண்டிகளை ஒழிக்கும் வேளாண் சட்டங்களில் மோடி அரசு இன்னும் உறுதியாக இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில், மண்டிகளை கடன் வாங்க அனுமதிப்பதாக ஒன்றிய அமைச்சரவை எடுத்த முடிவு, வெற்று அறிவிப்புதான். மிகச்சிறிய, முக்கியத்துவம் இல்லாத முடிவைத்தான் அரசு அறிவித்துள்ளது.இவ்வாறு விவசாயிகள் சங்கங்கள் கூறியுள்ளன.

;