districts

சொத்து வரி, வீட்டுவரி வசூலிக்க வீடுகளில் க்யூஆர் கோடு ஒட்டும் பணி

தஞ்சாவூர், ஏப்.4 -  தஞ்சாவூர் மாநகரிலுள்ள வீடுகளில் க்யூஆர் கோடு ஒட்டும் பணி  தொடங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு சார்பில், உள்ளாட்சி அமைப்புகளில் பொதுமக்கள் சேவைகளைப் பெறவும், புகார்களைத் தெரிவிக்கவும் டிஜிட்டல்மயமாக்கும் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, தஞ்சாவூர் மாநகரிலுள்ள வீடுகளில் கியூஆர் ஸ்கேன் கோடு ஸ்டிக்கர் ஓட்டும் பணி  தொடங்கப்பட்டது. இதையொட்டி, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை நடராஜபுரம் ஏழாவது தெருவில், இப்பணியை மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்.  அப்போது, செய்தியாளர்களிடம் மேயர் தெரிவிக்கையில், “க்யூஆர் ஸ்கேன் கோடு ஒவ்வொரு இல்லத்திலும் ஒட்டப்படுகிறது. இதை ஸ்கேன் செய்யும்போது பொதுமக்களின் தேவைகளை நிறைவு செய்யும் விதமாக இத்திட்டம் கொண்டு வரப்படுகிறது. குடிநீர் வராதது, குப்பை அள்ளப்படாதது உள்பட எந்த பிரச்னையாக இருந்தாலும், மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரிய வரும். உதாரணமாக, குடிநீர் குழாயில் அடைப்பால் தண்ணீர் வரவில்லை என்றால், மாநகராட்சி அலுவலகத்தில் மனுவாக கொடுக்கும்போது, அதைச் சீர் செய்வதற்கு ஓரிரு நாள்களாகும். இப்போது, இந்த க்யூஆர் கோடு வசதி மூலம் ஸ்கேன் செய்து தெரிவித்தால், அடுத்த ஓரிரு மணிநேரத்தில் அப்பிரச்சனை சரி செய்யப்படும். இதன் மூலம், மக்களின் பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படும். இந்த வசதி மூலம் சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, புதை சாக்கடை தொகை என எதுவாக இருந்தாலும் உடனடியாக வீட்டிலிருந்தே செலுத்தலாம். இந்த க்யூஆர் கோடில் வார்டு எண், தெரு பெயர், கதவு எண், தொடர்பு எண், குடிநீர் வரி எண், புதை சாக்கடை இணைப்பு எண், மின் இணைப்பு எண், குடும்ப அட்டை எண் உள்பட ஒவ்வொரு வீட்டினரின் முழுத் தகவலும் இருக்கும்.  தஞ்சாவூர் மாநகரிலுள்ள 51 வார்டுகளிலும் க்யூஆர் கோடு ஒட்டும் பணி ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும். இது உடனடியாக பயன்பாட்டுக்கு வந்துவிடும்” என்றார் மேயர்.

;